பக்கம் எண் :

 

       தாலப் பருவம்

299

        மாயோன் மேய காடுறை உலகமும்
        சேயோன் மேய மைவரை உலகமும்
        வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
        வருணன் மேய பெருமணல் உலகமும்
        முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
        சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

இந்நூற்பாவின் மூலம், முல்லை நிலத்துக்குரிய தெய்வம் மாயோன் என்பதையும், மருத நிலத்துக்குரிய தெய்வம் இந்திரன் என்பதையும் உணர்கின்றோம்.  இந்த இலக்கணக் குறிப்பினை எடுத்துக் காட்டுவார்போல நம் சேக்கிழார் பெருமானார், மருதநிலத்தின் தெய்வத்தைக் குறிப்பிடும் போது,

        உழுத சால்மிக ஊறித் தெளிந்தசே
        றிழுது செய்யினுள் இந்திர தெய்வம்
        தொழுது நாறு நடுவார் தொகுதியே
        பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்

என்றும், முல்லை நிலத்துத் தெய்வம் மாயோன் என்பதை அறிவிக்குங்கால்.

“அங்கண் முல்லையின் தெய்வமென்றருந்தமிழ் உரைக்கும்
 செங்கண் மால்”

என்றும் கூறியதையும் காண்க.

    ஆகவே, இத்தொண்டர் புராணத்திற்கு இலக்கணம் தொல்காப்பியம் என்பதைத்தான், “தொல்காப்பியம் தோன்றும் இலக்கணமா” என்று கூறினர்.

    சைவசமயாசாரமாகிய சரியை வழிபாட்டிற்கு அதிகாரியாக வேண்டுமானால், சமய தீட்சை பெறுதல் வேண்டும்.  சமய தீட்சை என்பது மண்டப பூசை செய்து விதிப்படி மாணாக்கனை வழிபடுவித்துச் சம்போத ஓமத்தால் சுத்திப் படுத்துவதாகும்.  இந்தத் தீட்சையோடு விசேட தீட்சை, நிர்வாண தீட்சை முதலியனவும் பெற்றவரே சைவ ஆகம