பக்கம் எண் :

 

           பாயிரம்

3

    மேலும்  பாயிரத்தின் சிறப்பை விளக்க எண்ணிய நச்சினார்க்கினியர்,

    “அப்பாயிரம்தான் தலைஅமைந்த யானைக்கு வினை அமைந்த பாகன் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும், நூற்கு இன்றி அமையாச் சிறப்பிற்றாய் இருத்தலின், அது கேளாக்கால், குன்றுமுட்டிய குரீஇப் போலவும், குறிச்சி புக்க மான் போலவும் மாணாக்கன் இடர்ப்படும் என்க “  என்று தொல்காப்பிய எழுத்ததிகாரத்தி்ல் எழுதிப் போந்தார்.

    இறையனார் களவியல் உரையிலும், பாயிரத்தின் இன்றியமையாமையினை, “என்போல எனின், கருவமைந்த மாநகர்க்கு உருவமைந்த வாயில் மாடம் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும், தகைமாண்ட நெடுஞ்சுவர்க்கு வகைமாண்ட ஓவியம் போலவும், என்பது ஆகலின், பாயிரம் கேட்டே நூல் கேட்கப்படும் “ என்று எழுதப்பட்டது.

    நன்னூலிலும் பவணந்தியார்

    மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
    ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல்-நாடிமுன்
    ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்
    பெய்துரையா வைத்தார் பெரிது

என்று எடுத்து மொழிந்துள்ளார்.  அணிந்துரை என்பது ஈண்டுப் பாயிரத்தை என்க.

    பாயிரம் பொது, சிறப்பென இருவகைப்படும்.  அவற்றுள் இப்பாயிரம் சிறப்புப் பாயிரம் ஆகும்.  இப்பாயிரத்தில் தெய்வவணக்கமும், சொல்லப்போகும் பொருள் இன்னது என்பதும் கூறப்பட்டிருத்தல் காண்க.  என்னை ? 

    தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்
    எய்த உரைப்பது பாயிரம் ஆகும்

என்பது விதி ஆதலின் என்க.  இப்பாயிரப் பாடலில் தெய்வ வணக்கமாக விநாயகர் துதி தொடங்கப்பட்டிருத்தலையும்,