பக்கம் எண் :

 

       தாலப் பருவம்

301

திருவருள் பதிதல்.  இவ்வாறு, சிவஞான சித்தியாரும், “மிக்கதொரு பக்குவத்தின் மிகுசத்தினி பாதம் மேவுதலும்” என்று விளக்குதலையும் காண்க.

    அற்புதம் மேவிய தொண்டர் புராணம் எனச் சிறப்பித்ததன் காரணமாக, இந்நூலில் பல செயற்கரிய செயல்களின் விளக்கம் கூறப்பட்டிருப்பதனால் என்க.

    சைவர்கட்கு உயிராகவும், உடலாகவும், உடையாகவும் உள்ளவை முறையே ஐந்தெழுத்து.  திருநீறு, உருத்திராக்கமாகும்.  இவற்றுள் புறத்தே விளக்கம் தருவன திருநீறும், உருத்திராக்கமும் ஆகும்.  இவையே சிவசின்னம் எனப்படும்.

    பெரிய புராணத்தைக் கேட்கத் தக்கவர் இன்னார் என்பதைச் சேக்கிழார் கூறும்போது, “மெய்ப்பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால்” என்று கூறியதற்கேற்ப, தொண்டர் புராணம் பாடி முடித்தபோது, கேட்டவர்கள் யாவர் என்பதை உணர்த்த  வந்த கொற்றவங்குடி உமாபதி சிவாசாரியார்,

வாழிதிருத் தொண்டர்புரா ணத்தை நீரே
    வாசித்துப் பொருள்அருளிச் செய்வீர் என்று
சோழர்பெரு மான்முதலாம் அடியார் எல்லாம்
    சொலக்கேட்டுக் குன்றைமுனி மன்றுள் ஆடும்
தாழ்சடையான் அடிஎடுத்துத் தரத்தாம் செய்த
    சைவகதை யினைவிளங்க விரித்துச் சொல்லச்
சூழஇருந் தம்பலவர் அடியார் எல்லாம்
    சுருதிமொழி இதுஎனக்கை தொழுது கேட்டார்

என்று கூறியருளினார்.

    இந்த எடுத்துக் காட்டினால் பெரியபுராணம் கேட்டற்குரிய பக்குவர் இன்னர் என்பது பெறப்படுகின்றதன்றோ? இது கருதியே, “சிவசின்னமுறும் பாக மரூஉம் பக்குவரே கேட்கப்படும் அதிகாரிகளா” என்றனர்.