பக்கம் எண் :

இவ

378

       சப்பாணிப் பருவம்

 

    இவ்வேண்டுகோளை இறைவர் நிறைவேற்றினார் என்பதைச் சேக்கிழார்,

நீடுதிருத் தூங்கானை மாடத்து நிலவுகின்ற
ஆடக மேருச் சிலையான் அருளாலோர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே வாகீசர் திருத்தோளில்
சேடுயர்மூ விலைச்சூலம் சினவிடையின் உடன்சாத்த

என்று உணர்த்தியுள்ளனர்.

    தண்டி அடிகள் கண் பார்வை அற்றவர்.  அவரிடம் சமணர்கள் போந்து பரவி, “உன் கண்பார்வை உறுமாறு நீ பணியும் பரமர் செய்ய இயலுமோ? இயன்றால் நாங்கள் இவ்வூரில் இரோம்” என்று அறைகூவிய போது, தண்டியடிகள் இதனை இறைவனிடம் முறையிட்டுப் பின் திருவாரூர் கமலாலயக் குளத்தில் மூழ்கி எழுந்தனர்.  அதுபோது அவர்க்குக் கண் பார்வை நன்கு தெரியவந்தது.  இதனைச் சேக்கிழார், “தொழுது புனல்மேல் எழும்தொண்டர் தூயமலர்க்கண் பெற்றெழுந்தார்” என்றருளினார்.  சுந்தரர் இதனை அழகுற, “நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” என்றருளிப் போந்தார்.  இவ்வாறு இறைவர் அடியவர் வேண்டியதை வேண்டியபடி ஈந்த இடங்கள் பல.  இதனால்தான் மணிமொழியார், “வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ” என்றனர்.  வாகீசரும் “வேண்டுவார் வேண்டுவன ஈவான் கண்டாய்” என்றனர்.  வள்ளலாரும் “வேண்டியநான் வேண்டியவாறு எனக்கருளும் தெய்வம்” என்றனர்.

    நம்பர் அருள் இன்றேல் ஈனசமயத் தொடக்கு இருந்தே தீரும்.  இதனைத் திருநாவுக்கரசர் நன்குணர்ந்தவர் என்பதைச் சேக்கிழார் வாக்கு உணர்த்துகின்றது.

நில்லாத உலகியல்பு கண்டுநிலை யாவாழ்க்கை
அல்லேன்என் றறத்துறந்து சமயங்கள் ஆனவற்றின்
நல்லாறு தெரிந்துணர நம்பர்அரு ளாமையினால்
கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம் குறுகுவார்

என்ற பாடலைக் காண்க.