பக்கம் எண் :

386

       சப்பாணிப் பருவம்

 

இறைவர் முதல் (முதற்பணம்) தந்தருளினார் என்ற நயம் இத்தொடரில் அமைந்திருத்தலையும் காண்க.

    இங்ஙனம் இறைவர் முதல் எடுத்து மொழிந்ததைக் கேட்ட தில்லை மூவாயிர அந்தணர்களும் வியந்து, சேக்கிழார் பெருமானாரின் பெருமையினை ஓர்ந்து, அவரைச் சிவனாராகவே போற்றி, அவர்க்குச் சந்தனம், மாலை, பரிவட்டம், திருநீறு ஈந்து சிறப்புச் செய்த செயல்கள் இங்குச் செவ்வனே குறிப்பிடப் பட்டுள்ளன.  அனைவரும் உச்சி மேல் கரம் குவித்து உளம் உருகினர்.  சேக்கிழார்க்குத் தில்லைவாழ் அந்தணர்கள்

செய்த சிறப்பினை உமாபதி சிவசாரியார்,

        உள்ள லார்புரம் நீறெழக்கணை ஒன்று
            தொட்டுயர் மன்றில்வாழ்
        வள்ள லார்திரு மாலை யும்திரு
            நீறும் மெய்ப்பரி வட்டமும்
        எள்ள லார்அலர் என்று சேவையர்
            காவ லர்க்கிவை இனிதளித்து
        அள்ள லார்வயல் நீடு தில்லையில்
            அனைவ ரும்களி கொண்டபின்

என்றனர்.

    இதனை ஆசிரியர் “அருமறையோர் கைகுவித்து நயந்து வியந்து உடனே நறுவிரை நல்கி அலங்கல் புனைந்து நகும் பரிவட்டம் எடுத்து” என்றனர்.  பரிவட்டம் எடுத்தலாவது சிவநேயச் செல்வர்க்கு இறைவன் ஆடையினைத் தலையில் சுற்றிச் சிறப்புச் செய்தல்.

    ஈண்டுச் சேக்கிழார் பெருமானாரது பணிவு எம்முறையில் இருந்தது என்பதையும், திருநீற்றை எம்முறையில் ஏற்பது என்பதையும் ஆசிரியர் அழகுபட காட்டியுள்ளார்.  விபூதியினைக் கும்பிட்டு ஏற்றார் என்பர் ஆசிரியர்.  இவ்வாறு திருநீற்றைப் பணிந்தே ஏற்க வேண்டும் என்பதைச் சேக்கிழார் பெருமானார் அப்பர் புராணத்துள்,

திருவாளன் திருநீறு திலகவதி யார்அளிப்பப்
பெருவாழ்வு வந்ததெனப் பெருந்தகையார் பணிந்தேற்று