பக்கம் எண் :

 

422

       முத்தப் பருவம்

உரைப்பார் உரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி நாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே

என்று வேண்டி, மகனை முதலை வாயினின்று வரவழைத்தார்.

    இதனைக் குறிப்பிடவே “வெங்கராக் கொண்டது மீட்கும் மிக்க விறலிற்றாய்” என்றனர். இங்கு விறலிற்றால் என்ற சொல்லைப் பயன் படுத்தியதில் ஒரு நயம் உளது.  சுந்தரர் செய்த செயல் செயற்கரிய செயலாகும்.  ஏனெனில், முதலை உண்டதாயின் அப்போதே சீரணித்திருக்கும்.  மேலும் முதலை விழுங்கிச் சில ஆண்டுகளும் ஆய் இருந்தன.  இங்ஙனம் முதலை விழுங்கிச் சில ஆண்டுகள் ஆயின என்ற குறிப்பு,

        உரைப்பார் உரைஎன் றெடுத்ததிருப்
            பாட்டு முடியா முன்உயர்ந்த
        வரைப்பான் மையில்நீள் தடம்புயத்து
            மறலி மைந்தன் உயிர்கொணர்ந்து
        திரைப்பாய் புனலின் முதலைவயிற்
            றுடலில் சென்ற ஆண்டுகளும்
        தரைப்பால் வளர்ந்த தெனநிரம்ப
            முதலை வாயில் தருவித்தான்

என்று பாடிய சேக்கிழார் வாக்கால் அறிய வருகின்றது.

    இது வியப்பினும் வியப்பன்றோ! இது வியத்திறகுரிய செயலே என்பதைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளும்,

        போத முண்ட பிள்ளை என்பு
            பொருகண் மாது செய்ததோ
        காதல் கொண்டு சொல்லில் மன்னர்
            கன்மி தப்ப உய்த்ததோ
        வாய்தி றந்து முதலை கக்க
            மகனை நீஅ ழைத்ததோ
        யாது நம்பி அரிதெ னக்கு
            நன்கி யம்ப வேண்டுமே

என்று பாராட்டிப் பேசினர்.