பக்கம் எண் :

 

428

       முத்தப் பருவம்

    இருமுறை இந்தச் சொற்களைப் பெய்து அச்சொல்லின் பொருள் நயத்தைப் புலப்படுத்தியுள்ளார்.  கணவன் மனைவியைப் பணிதல் உண்டு.  அப்பணிதற்குரிய விதி இலக்கணத்திலும் கூறப்பட்டுள்ளது.

    மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்
    நினையுங் காலைப் புலவியுள் உரிய

என்பது தொல்காப்பியம்.

    ஆனால், பரமதத்தன் மனைவியைப் பலரும் அறியும் வகையில், பணிந்தமையினால், அவன் மனிதப் பண்பு அற்றவனாயினான்.  கணவனுக்குரிய கட்டுப்பாடும் இல்லாதவனாயினான்.  ஆதலின், அன்னானை மரியாதைச் சொல்லால் குறிக்காது, ஒருமைச் சொல்லால், பொருட்பொலிவு தோன்ற இவன் என்றும் கூறியதன் நுண்பொருள் புலவர்கட்கு ஒரு விருந்தே ஆகும்.  இவற்றைக் கருதியே “சொல்லும் பொருளும் நனிசிறப்ப” என்றனர் திரு பிள்ளை அவர்கள்.

    காவியங்களில் அமையவேண்டிய அழகுகள் பத்து.  அவையே,

    சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
    நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
    ஓசை யுடைமை ஆழமுடைத் தாதல்
    முறையின் வைப்பு உலகம் மலையாமை
    விழுமியது  பயத்தல் விளங்கு உதாரணத்தால்
    ஆகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே

    இந்தப் பத்து அழகும் பெரிய புராணத்தில் அமைந்துள்ளது.

    அப்பூதி அடிகளார் புராணத்துள், அப்பெருமானார் தம் பெயரால் தண்ணீர்ப் பந்தல் நடைபெறுவதைக் கண்டு,  அப்பந்தரிடை இருந்தாரை நோக்கி, இவ்வாறு இதனை நிறுவியவர் யார்? என்று ஒரு வினாவிய வினாவிற்கு விடையாக அங்கிருந்தவர்கள் சுருக்கமாக “துன்றிய நூல்மார்பரும் இத்தொல்பதியார், மனையின்கண் சென்றனர்.  இப்பொழுது