பக்கம் எண் :

 

       வாரானைப் பருவம்

495

விக்கிரகம்-சுத்தமாயா சரீரம், சித்தி-அட்டமா சித்திகளைப் புரிதல், பசுகரணம் கெட்டுச் சிவகரணம் ஆதலும் ஆம்.  படு-தோன்றும் திறன்-கூறுபாடுகள், அற-ஒழிய, பகுதி-பிரகுருதிகள், வாதம் கூர்ந்து-வாதம் பேசி, வளம்கூடுதல்.  உண்மை முத்தி கூடுதல்.  வளம் கூடுசெந்தமிழ்-சைவத் திரு முறைகள், அருமை-பெருமை.

    விளக்கம் :  உலகில் மக்கள் ஒரே தன்மையராக இலர்.  வைதீகர்களாயினும் சரி ;  லௌகீகர்களாயினும் சரி ;  இரு வகையினரும் தாம் தாம் இன்பம் துய்ப்பதனைக் குறித்துத் தம் தம் கருத்தினைக் கூறி வருவர்.  மாதர்களோடு கூடி இன்புறுதலே சிறந்தது என்பர் ஒரு சிலர்.  இவர்களை உலகாயதர் என்று சைவ சித்தாந்த நூல் கூறும்.  இவர்கள் கொள்கையை,

    ஈசனார் அயனார் மாலோ டிந்திரன் தெரிவை மார்பால்
    பேசொணா வகைகள் எல்லாம் செய்தன்றோ பெரியோர்
                                                ஆனார்
    ஆகையால் அவர்போல் நாமும் ஆகவே வேண்டுமாயின்
    வாசமார் குழலா ரோடும் வல்லவா கூடி வாழ்மின்

என்னும் சிவஞான சித்தியார் பரபக்கப் பாடலாலும்,

    தண்ணாளி தேயன்பர் மேவிக் கலப்பத் தனையருளும்
    எண்ணாளி காழிப்பிரான்எனத் தன்னை இகலதெறுமைக்
    கண்ணாளி யாதும் கருதா தளிக்கக் கலந்தனம்யாம்
    விண்ணாளி ஆரணன் நாரணன் போகமும் வேண்டிலமே

என்று சீர்காழிக் கோவைப் பாடலாலும்,

        தாண்டும் சினைவிடை எம்மான்
            தனிவெங்கைத் தன்சிலம்பில்
        யாண்டும் பெறலரும் இன்பம்
            எல்லாம்ஐம் புலனும் இன்று
        தூண்டும் சுடர்என நின்றஇம்
            மாதரில் துய்த்தனவால்
        வேண்டும் பொருள்நமக் கேதோ
            இனிஇந்த மேதினிக்கே

என்ற திருவெங்கைக் கோவை கூறும் பாட்டாலும் தெளியலாம்.