பக்கம் எண் :

 

       வாரானைப் பருவம்

519

விளங்கும், அவையகத்து-மன்றத்தில், நலிவுபுரி-போவார் வருவாரைத் துன்பம் செய்யும், நீலி-பேயாய் மாறிய ஒருத்தியின் பெயர், நடுங்காநின்ற-நடுங்கிய, இறுதி-அழிவு, ஓருதி- உணர்க, வலத்தில்-வெற்றியில், எழுநா-ஏழுநாவினைப் பெற்ற அக்கினி, வடஆரணியம்-திருஆலங்காடு, ஆடுஒருவர்- நடனமிடும் இரத்தின சபாபதியாம் ஒப்பற்ற இறைவர், ஆர் அருள்-அருமையான அருளை, கொண்டல்-மேகமே, குன்றைப் பொரு-சிறுமலைகளைப் போன்ற, குன்றைக்கோமான்-குன்றத்தூரில் அவதரித்த தலைவராம் சேக்கிழார் பெருமானே.

    விளக்கம் :  பழையனூர் என்பது திருஆலங்காட்டிற்குக் கிழக்கே ஏறக்குறைய ஒருகல் தொலைவில் உள்ள ஊர்.  இப்பழையனூர் கங்கைகொண்ட சோழனால் திருவாலங்காடுடைய மகாதேவர்க்குத் தானமாகக் கொடுக்கப் பட்டது என்பதும், முதல் முதல் இவ்வூர்த் தென்னையும் பனையும் ஈழவரால் கள் இறக்கப்படாததாகவும் இருந்தது என்பதும் செப்பேடுகளால் அறிய வரும் செய்திகள்.  இதனால் மது விலக்கிற்கு முன்பே அடிகோலிய ஊர் பழையனூர் என்பது பெற்றாம்.

    இங்குக் காரைக்கால் அம்மையார் கோவில் உண்டு.  இவ்வூருக்கு ஆலங்காட்டு அப்பர் பங்குனி உத்திரத்தின் போதும், மார்கழி திருவாதிரையின்போதும் எழுந்தருளுவர்.  அப்பர் இவ்வூரைப் “பழனை” என மருஉ மொழியாக்கித்தம் பதிகத்தில் குறித்துள்ளனர்.  “அள்ளல் அப்பழனை மேய ஆலங்காட்டடிகளாரே” என்றனர்.  இவ்வூர், பொழில் வளமுடையது.  இசைவாணர்தம் முழஓசைமிக்கது, தீர்த்த விசேடம் உடையது என்றும் சிறப்பித்துள்ளனர்.  சம்பந்தர் இப்பழையனூரைச் சிறப்பிக்கும்போது,

    “கொந்தண் பொழில்சோலை அரவில் தோன்றிக்
     கோடல்பூத் தந்தண்பழையனூர்” என்றும்,

    “கோலம்பொழில் சோலைப் பெடையோடாடி
                                       ( மடமஞ்சை
     ஆலும் பழையனூர்” என்றும்