பக்கம் எண் :

10

 

       வாரானைப் பருவம்

539

10.    எள்ளும் திறத்துப் பரசமயர்
           ஏறு வருக தேறுதலில்
       எங்கள் உணர்வின் கணும்மதுரித்
           தினிக்கும் இருங்கோல் தேன்வருக
       தெள்ளும் புலத்தர் பெறுகாம
           தேனு வருக அருகந்தர்
       சிந்தா மணியைப் பொருட்படுத்தாச்
           செல்வச் சிந்தா மணிவருக
       உள்ளும் அவருக் கெய்ப்பிடைவைப்
           பொத்துள் எழும்ஒள் ஒளிவருக
       ஒழியாப் பத்திக் கடல்வருக
           உலவா தமைந்த சிவபோகம்
       கொள்ளும் சைவப் பயிர்வளர்க்கும்
           கொண்டல் வருக வருகவே
       குன்றைப் பொருமா ளிகைக்குன்றைக்
           கோமான் வருக வருகவே

    அ. சொ. எள்ளும்-இழிவாகப் பேசும், திறந்து-தன்மையுடைய ஏறு-சிங்கமே உணர்வின்கணும்-உணர்வினிடத்தும், மதுரித்து - இன்பம் செய்து, இருக்கோல்தேன் - பெரிய கொம்புத்தேனே, தெள்ளும் புலத்தார்-தெளிந்த அறிவுடையோர், ஞானிகள் அருகந்தர்-அருகர்களுடைய, சிந்தாமணியை-சீவக சிந்தாமணி என்னும் நூலை, சிந்தாமணி-தேவலோகத்தில் உள்ள சிந்தாமணியே, உள்ளுமவர்க்கு-நினைப்பவர்களுக்கு, எய்ப்பிடைவைப்பு-தளர்ந்த காலத்து உதவும் சேமநிதி, போகம் - விளைவு, சிவபோகம் - ஆன்மாவின் ஆனந்தானுபவ நிலை, உலவாது-குறையாது.

    விளக்கம் :  பரசமயத்தவர் ஈண்டுச் சமணர்கள், பௌத்தவர்கள்.  அவர்கள் செயல் நற்செயலாகப் புலனாகவில்லை.  அவர்கள் சம்பந்தர் இருந்த இடத்திற்குத் தீயிட்டனர் என்றால், அவர்தம் கொடுமைக்கு வேறு யாது கூற இயலும்?