பக்கம் எண் :

542

             வாரானைப் பருவம்

    சிந்தாமணி ஒருவகைத் தெய்வீகக் கல்.  இதுவும் வேண்டியதை ஈயும் தன்மையது.  அதுபோன்றவர் என்பது முன்பு கூறியிருத்தலில் சிந்தாமணி எனப்பட்டனர்.  சேக்கிழார் சிந்தாமணியினைப் பொருள் படுத்தா நிலையினை முன்பே பலவேறு இடங்களில் விளக்கப் பட்டிருத்தலைக் காணவும்.  சிந்தாமணியைச் சேக்கிழார் பொருள் படுத்திலர் என்பது உபசாரமே என்று உண்மை அன்று.  அரசன் சைன சமயத்தைச் சாராதிருக்கச் செய்ய அதனை இழித்துப் பேசினர் என்க.

    பெரிய புராணத்தினை நன்கு சிந்தித்துப் போற்றி வருபவர்க்கு அது எய்ப்பினில் வைப்பு என்பதை அவர் அவர் அனுபவத்தால் நன்கு உணரலாம். அடியேனும் இதற்கு ஓர் எடுத்துக் காட்டென ஈண்டு எழுதுவது குறித்து மன்னிக்கவேண்டுகின்றேன்.

    சேக்கிழார் பெருமானார் பிறந்த பதியாகிய குன்றத்தூர் நத்தத்தில், அவர்தம் குருபூசை விழாவில் எம்பிரானாரைப் பற்றிப் பேசுகையில், மேல் சட்டையுடனும் விசிறிமடிப்பு மேல் துணியுடனும் பேசுகையில், ஆண்டு வந்து சொற்பொழிவைச் செவி மடுத்துக் கொண்டிருந்த சைவ அன்பர் ஒருவர், ‘நீங்கள் இத்துணை அளவு சைவ சமயத்தைப் பற்றிச் சிறப்புடன் பேசுகிறீர்களே !  மேற் சட்டையின்றி அக்கமாலையுடன் நின்று சொற்பொழிவு ஆற்றலாமே” என்றனர்.  அவர் கூறியதில் தவறு இல்லை.  என்றாலும்,  அவர் பேச்சை அடக்குதற்குப் பெருந்துணையாக நின்றது சேக்கிழாரது சீரிய வாக்கே ஆகும்.  அவ்வாக்கு, “எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் மன்னிய சீர் சங்கரன்தாள் மறவாமை பொருள்” என்பது.  இவ்வாறு எய்ப்பிடைவைப் பாய் இவர் உள்ளார் என்பதற்கு வேறு எச்சான்று தேவை? இவ்வரிகளை உடனே எடுத்து இயம்பி அவ்வன்பரை மேலே பேச ஒட்டாது செய்து விட்டனன்.

    சேக்கிழாரது பக்திப் பெருக்கை இவர்தம் பிறந்த ஊர்க் கண்மையில் திருநாகேச்சுரத்தை ஏற்படுத்தி வழிபட்டு