பக்கம் எண் :

அரசு

 

       அம்புலிப் பருவம்

557

    அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண்டறங்கள்
                                            பேணிப்
    பரவரும் கடவுள் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்
    விரவிய கிளையும் தாங்கி விளங்கியகுடிகள் ஓங்கி
    வரைபுரை மாடம் நீடி மலர்ந்துள பதிகள் எங்கும்.

என்று பாடியுள்ளனர்.  இதில் சேக்கிழாரின் நுண்ணறிவின் உரம் தோன்றுதல் காண்க.  அதாவது தென்புலத்தார் என்பதற்குக் குரவர் என்று பொருள் கண்டதாகும்.  இதுவே உண்மைப் பொருள்.  பரிமேலழகர் கொண்ட பொருள் அத்துணைப் பொருத்தம் இல்லை.

    சுந்தரருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நம்பி ஆரூரர் என்று கூறவந்த இடத்தில், “தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பியா ரூர்என்றே நாமமும் சாத்தி” என்றனர்.  இதனை மறவாது இதற்கு மேற்கொள் காட்டுவார் போல, பெருமிழலைக்குறும்பர் நாயனாரின் இயல்பைக் கூறும்போது,

    நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே
    ஆளும் படியால் அணிமாதி சித்திஆன அணைந்து

என்றனர்.

    இவ்வாறு சேக்கிழார் நினைவாற்றலோடு  பாடியது  போலவே தாமும்   பாடவேண்டும் என்ற கருத்தில் கம்பரும் ஆரண்ய காண்டத்தில் சீதையை இராவணன் “இதயமாம் சிறையில் வைத்தான்” என்று கூறி, யுத்த காண்டத்தில் மண்டோதரி புலம்பலில் சீதையை அச்சிறையில் நின்று விடுதலை புரிவார்போல இராவணன் மார்பைப் பல துளைகளாகத் துளைத்தமைக்குக் காரணம் காட்ட,

        “கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
             மனச்சிறையில் கரந்த காதல்
         உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து
             தடவியதோ ஒருவன் வாளி”

என்று பாடினர்.