பக்கம் எண் :

தம

578

             அம்புலிப் பருவம்

    தமிழில் முத்தமிழ் உண்டு.  அவையே இயற்றமிழ், இசைத் தமிழ் நாடகத் தமிழ் என்பன.  இவை விரிக்கில் பெருகும்.  ஆனால், இசைத் தமிழ் பற்றிய சிறு குறிப்பை மட்டும் ஈண்டுக் குறிப்பிடுவோமாக.  தமிழின் இசைப்பெயர்கள் மாறி வேற்றுப் பெயரால் இக்காலத்தில் வழங்கப்படுகின்றன.  செம்பாலைப் பண் தீரசங்கராபரணம் என்றும், படுமலைப் பாலைப் பண் கரகரப்பிரியா என்றும், செவ்வழிப் பாலைப் பண் தோடி என்றும், அரும்பாலைப் பண் கல்யாணி என்றும், கோடிப் பாலைப் பண் அரிகாம்போதி என்றும், விளரிப்பண் பைரவி என்றும், மேற் செம்பாலைப் பண் சுத்த தோடி என்றும் வழங்குவதைக் காணவும்.  தேவாரத்தில் வரும் தமிழ்ப் பண்களை ஈண்டு நினைவு கொள்க.

    மறைநூல்கள் தமிழில் இருந்தன என்பதை “மறை மொழி கிளந்த மந்திரத்தானே” “மறைமொழிதானே மந்திரம் என்ப” என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க.  வள்ளுவருக்கும் இஃது உடன்பாடு என்பதை,

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்

என்று அவர் கூறியிருப்பதால் அறிக.

    திருஞான சம்பந்தரும் இக்குறிப்பினை “மலரடி ஒன்றடியவர் பராவத் தமிழ்ச்  சொலும் வடசொலும் தாணிழல்சேர” என்றருளியுள்ளனர்.  தாள் நிழல்சேர என்றதன் கருத்து, தமிழ் மந்திரங்களாலும், வடமொழி மந்திரங்களாலும் வழிபாடு செய்ய என்பதாம்.  மந்திரம் என்னும் சொல்லே தமிழ்ச் சொல்லாகும்.  மனம்+திரம் மந்திரம்.  மனத்தின் உறுதி என்பது இத்தொடர் பொருள்.  திரம் திறம் என்பன போலி மொழிகள்.  இதுபோது தமிழ் வேதமாக இருப்பன இன்ன என்பதை,

    தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
    மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
    திருவா சகமும் திருமூலர் சொல்லும்
    ஒருவா சகம்என் றுணர்