பக்கம் எண் :

586

             அம்புலிப் பருவம்

மாற்றாவது ஒரு செய்யுளை ஈற்றிலிருந்து எழுத்துக்களைச் சேர்த்து வாசிப்பினும், அச்செய்யுளாகவே அமைந்திருப்பது, திருஞானசம்பந்தரது மாலை மாற்றுப் பாடலாகிய.

    காலேமேலே காணீகாழீ காலே மாலே மேபூ
    பூமேலே மாலே காழீ காணீ காலே மேலேகா

என்ற பாடலை ஈற்றிலிருந்து எழுத்தைக் கூட்டி வாசித்து இன்னது என்பதை அறிக.

    இத்தகைய சித்திரக் கவிகளை முதல் முதல் திருஞான சம்பந்தர் பாடிய காரணத்தினால்தான் சேக்கிழார் இவரது சித்திரக்கவிகளை “மூல இலக்கியங்கள்” என்று மொழிந்தனர்.

    வித்தாரகவி என்பது காவியமாக, புராணமாக ஒரு நூலைப் பாடுதலாம். நமது சேக்கிழார். கச்சியப்பர், கம்பர் போன்றவர்கள் வித்தாரகவிகள். கவி, கமகன் வாதி வாக்கி யாகியவர்களைப் பற்றிய விளக்கத்தினை இலக்கண விளக்கம்,

    ஆசு மதுரம் சித்திரம் அகலம்
    பாவகை பாடுவோன் கவிஎனப் பாடுமே

    நிறைந்த கல்வியான் நிறைந்த அறிவான்
    அறைந்த ஒருபொருள் அதனை விரிக்க
    வல்லவன் கமகன் சொல்லுங் காலை

    ஏதுவும் மேற்கோளும் எடுத்துக் காட்டித்
    தன்கோள் நிறீஇப் பிறர்கோள் மறுக்கும்
    வன்புடை யோனே வாதி ஆவான்

    அறம்பொருள் இன்பம் வீடென நான்கும்
    திறம்பா திவரச் செஞ்சொல் கொண்டருள்
    நோக்கி உரைப்போன் வாக்கி ஆவான்

என்று விளக்கியுள்ளது.

    இத்தகைய கவிஞர் பெருமக்களால் சேக்கிழார் போற்றப் படுவர் எனில், அவர்தம் புலமையினை எங்ஙனம் புலப்படுத்துவது? மேலும் இவரும் கவி, கமகன் வாதி வாக்கியும் ஆவார் என்பது பெறப்படுகின்ற தன்றோ?