பக்கம் எண் :

New Page 1

 

       அம்புலிப் பருவம்

589

வேளாளர் முதலான மரபினர் சாதிகள் நெறியில் தப்பார் என்பதனால், அவர்  அவர் தம் கடமைகளை ஒழுங்காகச் செய்து ஒருவர்க் கொருவர் அன்புடன் ஒழுகினர் என்ற அன்பு ஒழுக்கத்தினையும், தனையரும் அனையில் தப்பார் என்றதனால் பெற்றோர் கட்கு அடங்கிப் பிள்ளைகள் இருந்தனர் என்பதையும், நீதியும் புள்ளும் மாவும் என்றதனால் பறவைகளும் விலங்குகளும் ஒன்றுக்கு ஒன்று பகையின்றி வாழும் நிலையில் அரசநீதி நிலைவியது என்பதையும், நிலத்திருப்பு உள்ளும்மாவும் என்றதனால் இலக்குமி குடிகொண்டு செல்வ முட்டுப்பாடு இன்றி நாடு இருந்தது என்பதையும், ஈற்றடியினால் மக்கள் “சிவாயநம” என்னும் ஐந்தெழுத்தை ஓதியதனால் நோய்கள் அணுக அஞ்சி நின்றன என்பதையும் நமது சேக்கிழார் அறிவுறுத்தி இருத்தலால், அரும் பொருளைச் செம்பொருளாகப் பாடும் கமகன் என்னும் கவிஞராய் விளங்குவதையும் காணலாம்.

    தண்டி அடிகள் புராணத்தில் தண்டி அடிகட்கும் சமணர் கட்கும் நடந்த வாதத்தினைச் சேக்கிழார் செம்மையுறப் பாடியுள்ளனர்.

        மாசு சேர்த்த முடையுடலார்
            மாற்றம் கேட்டு மறுமாற்றம்
        தேசு பெருகும் திருத்தொண்டர்
            செப்பு கின்றார் “திருவிலிகாள்
        பூசு நீறு சாந்தமெனப்
            புனைந்து பிரானுக்கு ஆனபணி
        ஆசி லாநல் லறமாவ
            தறிய வருமோ உமக்கென்றார்

        அந்த மில்லா அறிவுடையார்
            உரைப்பக் கேட்ட அறிவில்லார்
        சிந்தித் திந்த அறம்கேளாய்
            செவியும் இழந்தா யோஎன்ன
        மந்த உணர்வும் விழிக்குருடும்
            கேளாச் செவியும் மற்றுமக்கே
        இந்த உலகத் துள்ளனஎன்
            றன்பர் பின்னும் இயம்புவார்