பக்கம் எண் :

என

596

             அம்புலிப் பருவம்

என்ற கலித்தொகையின் பாடலில் “எனவாங்கு” என்பது கூனாம்.  இவ்வாறு சேக்கிழார் பாடல்களில் யாண்டும் கூனாம் தனிச் சொல் இன்மையை உணரலாம்.

    “நாவலொடு பெயர் பெறும் பெரும் பொலம்” என்பது சாம்புநதம் என்னும் பொன்னாம்.  சம்பு என்பது நாவல்.  பொலன் என்பது பொன்.  நமது இந்தியாவில் பொன்னாவல் மரம் இருந்ததாகக் கருதப் பட்டமையின், இது சம்புத்தீவு எனப்பட்டது.

    பெரிய புராணம் பொன்னினும் சிறந்தது எனப் போற்றியதைக் காண்க.  சேக்கிழார் பெருமானார்க்கு வால்மீகியார், வேதவியாசர், ஆதிசேடன் ஒப்பாகார் என்பது முன்பே கூறப்பட்டது.  அறிஞரால் போற்றப்படுபவர் என்பதற்கு ஏற்ப, ஈண்டு நாவலோர் பரவும் சேக்கிழார் என்றனர்.  மதி என்றது சந்திரனை விளித்த மொழியாம்.  அச் சந்திரனிடம்  “நீ இவருடன் வந்து விளையாடு.  உன் கூன் ஒழியும்.  இதுவே ஊறுதி” (அதாவது நன்மை) என்று கூறி அழைத்தவாறாம்.

    சிவஞான முனிவர், தமது காஞ்சி புராணத்தைக் காஞ்சியில் அரங்கேற்றுகையில், ஏகாம்பரநாதர் துதிக்கு முன் சுபாநாதர் துதியினைப் பாடிப் பொருள் விரிக்கையில், ஆண்டிருந்த ஓதுவார்கள், “இப் புராணம் ஏகாம்பரநாதர் பற்றிய புராணம் ஆதலால், அவர்க்குரிய துதியைமுன் கூறாது, தில்லைச் சபாநாதர் துதி முன்னர்ப் பாடப்பட்டிருப்பது குற்றம்” எனக் கூறினர்.  அதுபோது நாவலராம் சிவஞான முனிவர், அதற்கு விடை இறுக்காது, காஞ்சிப் பதியைப் பற்றிய தேவாரம் பாடும்படி ஓதுவாரிடம் கூறினர்.  அவர்கள் “திருச்சிற்றம்பலம்” என்று கூறிப் பின் கச்சிப் பதியின் பதிகத்தை ஓதினர்.  ஓதி முடிந்தபின் சிவஞான முனிவர், “நீங்கள் திருவேகம்பன் தேவாரம் பாடத் தொடங்குமுன், இத் தலத்தின் அம்பலமாகிய பிருதுவி அம்பலம் என்று கூறாது திருச்சிற்றம்பலம் எனத் தில்லை அம்பலத்தை ஏன் குறிப்பிட்டீர்கள்?” என்றபோது, அவர்கள் “இவ்வாறு திருச்சிற்றம்பலம் என்று கூறுதல்தான் சைவ மரபு” என்றனர்.