பக்கம் எண் :

New Page 1

 

       அம்புலிப் பருவம்

601

    [அ. சொ.] கறுக்கச்சிவத்தல்-கோபித்தல், பூண்டான்-மேற்கொண்டான், திறம்-உள்ளவகை, போதலுற-செவியில் நுழையுமாறு புகன்றோம்-கூறினோம், முனிந்திடில்-கோபித்தால், புன்மையான்-அற்பன், தாழ்ந்தவன், கவி-பாடல், புராதனன்-முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளான இறைவர், வீதல்உறல்-சாதல், உள்ளதுகொல்-இருக்கிறதா,ஓர்ந்து - அறிந்து, மேயினேன் - வந்தேன், மிக்காதல்-மேன்மை, விழைதரும்-விரும்பும்.

    விளக்கம் : சந்திரன் அழைத்தும் வாராததுபற்றிச் சேக்கிழார் சினம் கொண்டார் என்பது முதல் மூன்றடிகளின் கருத்து.  சேக்கிழார் முற்றிலும் முனியாது சற்றே முனிந்தனர் என்பதால், அவரது குண மேம்பாடு தெரிய வருகிறது.  அவரது வெகுளி, குணமெனும் குன்றேறி இருந்தார் வெகுளி.  வெகுளி கொண்டு முற்றிலும் முனிந்திருந்தால் அவன் உய்யான்.  இவ்வாறு பேரறிஞர்கள் தமது சினத்தைச் சிறிதே காட்டுவர் என்பதற்குத் திருஞானசம்பந்தர் ஒரு சான்றல்லரோ? அவர் தமது மடத்தில் சமணர் வைத்த தீயை மன்னன்பால் ஏகுமாறு சாற்றியபோதும் “பையவே சென்று பாண்டியற்காகவே” என்றனர் அல்லரோ? அங்ஙனம்  பையவே என்றதன் கருத்து இன்னது என்பதை விளக்கவந்த ஆசிரியராம் சேக்கிழார்,

    “பாண்டிமாதேவியார் தமது பொற்பில் பயிலும்நெடு மங்கலநாண் பாதுகாத்தும் ஆண்டகையார் குலச்சிறையார் அன்பினாலும், அரசன்பால் அபராதம் உறுதலாலும், மீண்டு சிவநெறி அடையும் விதியினாலும் வெண்ணீறு வெப்பகலப் புகலிவேந்தர் தீண்டியிடப் பேறுடையன் ஆதலாலும், தீப்பிணியைப் பையவே செல்க என்றார்” என்று விளக்கினார்.  சிவனார் யமனை உதைத்தபோதும் உரப்பாக உதையாது சிறிதே உதைத்தான் எனஇறைவன் கருணையினைக் கச்சியப்ப சிவாசாரியார்.