பக்கம் எண் :

 

       சிற்றில் பருவம்

611

வீடறியாது சமணர்மொழி பொய்என்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப்
பாடலிபுத் திரத்தில்அமண் பள்ளியொடு பாழிகளும்
கூடஇடித் துக்கொணர்ந்து கணபரஈச் சரம்எடுத்தான்

என்று எவ்வளவு குதுகலமாகக் கூறுகின்றார் பாருங்கள் இப்படி எண்ணித்தான் எங்கள் சிற்றில் சிதைத்தீரோ என்று சிறுமியர் செப்பலாயினர்.  “ஒன்றைப் புரிவதால் புண்ணியமாவது, புருஷார்த்தமாவது உண்டாதல் வேண்டும். எங்கள் சிறு வீட்டைச்சிதைக்கீன்றிரே இஃது உங்கட்குப் புண்ணியமோ புகழோ தருமா?” என்று இரந்து கூறினர் சிறுமியர்.

    திரு. பிள்ளை அவர்கள் இப்பாடல் மூலம் பால் ஆற்றின் பலவகைச் சிறப்பையும், அந்நதியின் பாய்ச்சலால் நாட்டில் நெல்லின் வளர்ச்சியின் மேம்பாட்டையும், சைவ சமயத்தில் தமக்கு இருக்கும் பற்றையும், பிற சமயங்களிடத்தில் தமக்கு இருக்கும் வெறுப்பையும் உணர்த்தலுற்றனர்.  ஆறுகள் வெள்ளம் மிக்கு ஓடுகையில் நீரைச் சுழித்துக் கொண்டு ஓடுதலை இன்றும் காணலாம்.

    முன்னொரு சமயம் காமதேனு இறைவனது ஊர்தியான விடையைக் கண்டு காமுற்றது.  அதனால் கருக்கொண்டது.  நந்திமலையில் வசிட்டர் தவம் செய்து கொண்டு இருந்தனர்.  அதுபோது தமது நித்திய வேள்விக்குப் பஞ்ச கௌவியம் கிடைக்கப் பெறாமையால் ஒரு தருப்பையை எடுத்துக் கன்றாக காம தேனுவினிடம் அனுப்ப, அதைக்கண்ட காமதேனு மடிசுரந்து அம்மலையில் பாலைப் பொழிந்தது. அஃது ஆறாகப் பெருக்கெடுத்தது அதுவே பாலாறாகும்.  இதனைக் காஞ்சிப் புராணம்,

பேரிசைப் புவிமேல் யார்க்கும் பெட்டன பெட்ட வாறே
சீரிதில் கொடுக்கும் தேனுத் தரவரும் செழுநீர்ப் பாலி

என்று அறிவிப்பதை அறியவும்.  இது பாலியின் வரலாறு.