பக்கம் எண் :

620

             சிற்றில் பருவம்

    பிள்ளைப் பேறு எளிதில் கிடைப்பது இல்லை.  அதற்குத் தவமும் புண்ணியமும் தேவை, ‘மாலையிட்ட செல்வத்தார்கள் மகிழ ஓர் மகவும்தாரான் அலையிட்ட முட்டாள் செய்ய அம்புயத்துறைவோன்’ என்று திரு.  பிள்ளை அவர்களே குசேலோபாக்கியானத்தில் பாடியுள்ளார்.  இந்நூலைத் திரு பிள்ளை அவர்கள் பாடினர் என்பது ஒருமரபு, தவத்தால் பிள்ளைப்பேறு பெறலாம் என்ற நம்பிக்கையினால்தான் தனபதி செட்டியார் தவத்தை மேற்கொள்ளக் கானகம் சென்றார், என்பதைத் திருவிளையாடற் புராணம், ‘பிள்ளைப் பேறு தருதவம் புரிவேன் என்னாத் தனபதி தவமேற் சென்றார்’ என்று கூறுகிறது.  பெரிய புராணமும் பிள்ளைப் பேற்றிற்குத் தவம் தேவை என்பதை,

        மனைஅறத்தின் இன்பமுறும்
            மகப்பெறுவான் விரும்புவார்
        அனையநிலை தலைநின்றே
            ஆடியசே வடிக்கமலம்
        நினைவுறமுன் பரசமயம்       
            நிராகரித்து நீறாக்கும்
        புனைமணிப்பூண் காதலனைப்
            பெறப் போற்றும் தவம்புரிந்தார்

என்று அறிவிக்கின்றது.  இவற்றை உணர்ந்தே  “தவம்  செய்து  அருமருந்தில்  பெற்றார்” என்றனர்.  வள்ளுவரும்,  மக்கட்  பேற்றின்  அருமையினை,   “பெறும்  அவற்றுள்  யாம் அறிவதில்லை, அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற” என்றும், “எழு பிறப்பும் தீயவை தீண்டா, பழி பிறங்காப் பண்புடை மக்கட் பெறின்” என்றும் கூறியுள்ளார்.

    எந்தச் சிறு ஊறும் தம் குழந்தைகட்கு வந்ததாகக் கேட்டாலும் பெற்றோர்கள் பதைப்பர் என்பது அவர்கட்கு தம் பிள்ளைகள் மாட்டுள்ள பேர் அன்பைப் புலப்படுத்துவதாகும்.  கேட்டாலே துன்புறுவர் எனில், கண்டால் பெரிதும் துண்புறுவது அல்லரோ? ஆகவே, காணின் என்படுவர்? என்றனர். பெற்றோர்கட்குப் பிள்ளைகளிடத்துள்ள அன்