பக்கம் எண் :

நமச

 

       காப்புப் பருவம்

63

    நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்
    நமச்சி வாயவே நான்அறி விச்சையும்
    நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
    நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே

என்றும்,

    விறகில் தீயினன் பாலில்படு நெய்போல்
    மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்
    உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
    முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

என்றும்.

    கற்றுக் கொள்வன வாயுள நாவுள
    இட்டுக் கொள்வன பூவுள நீருள
    கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
    எற்றுக் கோநம னால்முனி வுண்பதே

என்றும்,

    மனித்தர்காள் இங்கேவம் ஒன்று சொல்லுகேன்
    கனிதந் தால்கனி யுண்ணவும் வல்லிரே
    புனிதன் பொற்கழல் ஈசன் எனும்கனி
    இனிது சாலவும் ஏசற் றவர்கட்கே

என்று மக்கட்கு அருள் உபதேசம் செய்திருப்பதனால், திரு நின்ற கண்டரது திருவருள் பெற்றுத் திருவருள் புரிந்ததால் இங்ஙனம் அடை கொடுத்துச் சிறப்பிக்கப்பட்டார்,எனினும் ஆம்.

    கருது புகழ் எழுவரும் புகழுக்குரியவர்கள் என்பதைக் கீழ் வரும் அவர்களது வாழ்க்கைக் குறிப்பால் உணர்ந்து கொள்ளலாம்.

    திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில், வேளாளர் மரபில் குறுக்கையர் குடியில் புகழனார் மாதினியார் இருவர்க்கும் திருமகனாராகப் பிறந்தார்.  இவருக்குத் திலகவதியார் என்னும் தமக்கையார் உண்டு.