இவர
இவர் சைவ சமயம் தணந்து
சமண சமயம் புகுந்தார். இவரை மீண்டும் சைவ சமயம் புகுமாறு செய்யத் திலகவதியார் இறைவரை வேண்ட,
இறைவர் அவருக்குச் சூலநோய்தர அதனைச் சமணர் போக்க முயன்றும் போகா நிலையில் தம் தமக்கையாரை
அடைந்து திருநீறும் ஐந்தெழுத்து உபதேசமும் பெற்று, நோய் நீங்கிச் சைவர் ஆயினர். இதனால்
சமணர்கள் இவரைக் கொல்ல யானையை ஏவினர். கண்ணாம்பு காளவாயில் அடைத்து வைத்தனர். நஞ்சு
உணவு கொடுத்தனர். கல்லோடு கட்டிக் கடலில் எறிந்தனர். இவற்றினின்று இறைவர் திருவருள்
கொண்டு உய்ந்தார். பிறகு இறைவரிடம் தாம் சமண சமயம் புகுந்ததனால் உண்டான மாசு நீங்கச்
சூலப் பொறி, இடபப் பொறி பொறித்தருள வேண்டினர். இறைவரும், அவ்வாறே செய்தனர். இடையிடையே
பல தலங்கட்குச் சென்று, பதிகங்கள் பாடினார். திருஞான சம்பந்தரைக் கண்டு இன்புற்றார். திருநல்லூரில்
இறைவர் தம் திருவடி சூட்டும் பேறு பெற்றார் அப்பூதியார் அருமை மகனார் பாம்பு கடித்து இறந்ததை
அறிந்து பதிகம்பாடி அவனை எழுப்பினார். திருவீழமிழலையில் இறைவர் தினமும் தந்த படிக்காசு பெற்று
மகேஸ்வரபூசை நடத்திவந்தனர். திருமறைக்காட்டில் வேதங்களால் பூசித்துச் சாத்தப்பட்ட கதவைப்
பதிகம் பாடித் திறந்தார். திருப்பழையாறு வடதளியில் சமணர்களால் மறைப்புண்ட சிவலிங்கத்தைப்
பாடு கிடந்து வெளிப் படுத்தினர். திருப் பைஞ்ஞீலிக்குப் போகும் வழியில், இவரது களைப்பை
நீக்க இறைவர் பொதி சோறு ஈந்தார். கயிலை காணவேண்டும் என்ற அவாவினால் உடல் தேய வடக்கு
நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். இறைவர் இடையே தோன்றி அவரது உடல் குறை நீக்கித் திருவையாற்றில்
கயிலைக் காட்சி காண ஆணையிட, அவ்வாறே அங்குக் கண்டு இன்புற்றார். திருப்புகலூரில் திருத்தொண்டு
புரிந்து, இறைவன் திருவடியுற்று இன்புற்றார். இவர் இறைவனோடு இரண்டறக் கலந்த நாள் சித்திரை
மாதம் சதய நட்சத்திரம் ஆகும்.
|