New Page 1
குலச்சிறையார்
பாண்டிய நாட்டில்
மாணமேற்குடியில் பிறந்தவர். சிவனடியாரிடம் பேர் அன்பு கொண்டவர். திரு நீறு இட்டவரெவராயினும்
அவர்கள் திருவடியில் பணிபவர். நெடுமாறரின் மந்திரியார். சமணம் ஒழியச் சைவம் ஓங்க மங்கையர்க்கரசியார்க்குப்
பெருந்துணையாய் இருந்தவர்.
பெருமிழலைக்குறும்பர்
மிழலையில்
பிறந்தவர். அடியார்களின் குறிப்பறிந்து தொண்டு புரிபவர். சுந்தரரிடம் பேரன்பு கொண்டு அவரை
வழிபட்டு அஷ்டமாசித்திகள் கைவரப் பெற்றவர். ஐந்தெழுத்து ஓதி யோக நிலையையும் உற்றவர்.
காரைக்கால் அம்மையார்
காரைக்காலில்
தனதத்தருக்கு வணிகர் மரபில் பிறந்தவர். இவரது இயற்பெயர் புனிதவதி அம்மையார் என்பது.
இவருக்குப் பரம தத்தன் கணவனாக அமைந்தான். அவனுக்கு இருமாங்கனிகள் நண்பர்களால் கொடுக்கப்பட்டன.
அவற்றுள் ஒன்று அம்மையாரால் சிவனடியார்க்குப் படைக்கப்பட்டது. பரமதத்தன் ஒரு கனியை உண்டான்.
சுவையுடையதாய் இருக்கவே, மற்றொரு கனியையும் படைக்கக் கேட்டான். அம்மையார் உண்மை கூறாது
இறைவனை வேண்டி, ஒரு கனி பெற்றுப் படைத்தார். அது முன்னையதினும் சுவை மிக்கிருந்தமையின்,
‘ இஃது ஏது ?’ என்று கேட்க, அம்மையார் உண்மை கூறினார். ‘ அற்றேல், மீண்டும் ஒரு கனியை
அழைக்க ‘ என அம்மையார் இறைவரை வேண்ட ஒரு கனி வந்துற்றது. அதனைக் கணவன் கையில் இட்டதும்
மறைந்தது. பரமதத்தன் அம்மையாரை ஒரு தெய்வம் என்று அறிந்து, பிரிந்து மதுரை அடைந்து மறுமணம்
புரிந்து மகவும் பெற்றான். இதனை அறிந்த அம்மையார் மதுரைக்கு வரப் பரமதத்தன் தன் மனைவி
மகளுடன் வந்து காலில் வீழ்ந்து பணிந்தான். அம்மையார் உலக இன்பத்தை வெறுத்துப் பேய்வடிவுபெற்று,
கயிலைக்குத் தலையால் நடந்து சென்று பின் இறைவன் ஆணைப்படி திரு ஆலங்காடு உற்று ஆலங்காட்டப்பர்
நடனம் கண்டு இன்புற்றார்.
|