பக்கம் எண் :

New Page 1

654

             சிற்றில் பருவம்

“தோற்றம் துடிஅதனில தோயும் திதிஅமைப்பில்

   சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்-ஊற்றமா

   ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோ தம்முத்தி

   நான்ற மலர்ப்பதத்தே நாடு” 

என்றும்,

  “மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்

   சாய அமுக்கி அருள்தான் எடுத்து-நேயத்தால்

   ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்

   தானெந்தை யார்பரதம் தான்” 

 

என்றும்,

 

  “மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்

   தானந்த மானிடத்தே தங்கியிடும்-ஆனந்தம்

   மொண்டருத்தி நின்றாடல் காணும்அருள் மூர்த்தியாக்

   கொண்டதிரு அம்பலத்தான் கூத்து”

 

என்றும் கூறுதல் காண்க.

 

   இறைவனது தாண்டவம் ஆனந்தத் தாண்டவம், இன்பம் ஊட்டும் தாண்டவம் என்பதை அப்பர் பெருமானார்,

 

   குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில் குமிண் சிரிப்பும்

   பனித்த சடையும் பவளம்போல் மேனியில்பால் வெண்ணீறும்

   இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்

   மனித்தப் பிறவியும் வேண்டு வதேஇந்த மாநிலத்தே

   ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக்

   கன்றிய காலனைக் காலால் கடந்தான் அடியவற்காச்

   சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம் பலத்து நட்டம்

   என்றுவந் தாய்எனும் எம்பெரு மான்தன் திருக்குறிப்பே

 

என்று அறிவித்திருப்பதையும் அறியவும்.