பக்கம் எண் :

சங

 

       சிறுபறைப் பருவம்

673

    சங்கு ஊதாக் கோயில்களும், விதானம், வெண்கொடி இல்லா ஊர்களும் மலர்இட்டு வழிபடா ஊர்களும், திருவில் ஊர்கள் கோவில்கள் என்பதும், அவ்வூர் அடவிக்காடு என்பதும் அப்பர் கருத்தாகும்.

விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும்
    விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா ஊரும்
    அவைஎல்லாம் ஊரல்ல அடவிக் காடே”

என்ற அப்பர் வாக்கை அறிக.

    இவை அறிந்தே “புலரியில் சிவபிரான் தளி எழும் சங்க முழக்கு” என்றனர்.

    சரியை, கிரியைகளை மேற்கொண்டு வருபவர்கட்கு அனுட்டான காலத்தை முற்கூட்டி அறிவிப்பது சங்கொலி.  மேலும், தியான சமாதியினாலே சிவனது அருவத்திரு மேனியை எண்ணிச் செய்யும் வழிபாட்டிற்குச் சங்கம் முதலியன துணையாகும்.  ஆகவே, “போதரு முழக்கு இசைப்பெரு முழக்கு” என்றனர்.

    யோக சாதனம் இன்னது என்பதும் முன்பே விளக்கப்பட்டது.  சிவயோக சாதனத்தவர் காரணம் கருதிப் போக நிலையுறும் போதும், சிவயோக போகமாகவே கருதி இன்புறுவர் என்பதை யோகமார்க்க நிலையினை நிறுத்த வந்த சுந்தரரது செயல் முறையால் அறியலாம்.  இதனை நமது சேக்கிழார்,

தென்னா வலூர்மன்னர் தேவர்பிரான் திருவருளால்
மின்னாரும் கொடிமருங்குல் பரவைஎனும் மெல்லியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோகப் பரம்பரையின் விரும்பினார்.

என்று அறிந்து உணர்த்தியுள்ளதைக் காணவும்.

    இத்தகைய யோகியர்களைக் குறிக்கவே “திறலாளர்” என்றனர்.  சங்கம், சடகம், பேரி என்பன இசைக்கருவிகள்.  யோகியர்கட்கு எழும் ஒலி என்றது நாத ஒலியேயாகும்.