பக்கம் எண் :

இக

 

       சிறுபறைப் பருவம்

699

    இக் காலத்தில் தமது கொள்கையினை நிலைநாட்ட உண்ணாவிரதம் இருப்பதைக் காணலாம்.  இதனையே இக் காலத்தில் சத்தியாக்கிரகம் என்பர்.  பாடு கிடத்தல் என்றும், கூறுவர்.  இம்முறை பண்டைக் காலத்தில் உண்டு என்பதைப் பெரிய புராணத்தில் காணலாம்.  இதனை அப்பரது வரலாற்றில் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளனர்.  வாகீசர் பழையாறை வடதளி என்னும் தலத்தை வந்தடைந்தார்.  அங்குள்ள சிவலிங்கத்தைச் சமணர் மறைத்து வைத்திருந்தனர்.  அதனைக் கண்ட தாண்டக வேந்தர் “சிவலிங்கத்தைக் கண்டு தரிசியாது உண்ணேன்” என்று உறுதிகொண்டனர் என்பதை,

        வண்ணம்கண்டு நான்உம்மை
            வணங்கிஅன்றிப் போகேன்என்
        றெண்ணம் முடிக்கும் வாகீசர்
            இருந்தார் அமுது செய்யாதே

என்று பாடியுள்ளனர்.  இது பெரிய புராணத்துள் எதுவும் உண்டு என்பதற்குச் சான்று அன்றோ?

    அத்தி உண்டு என்ற பொருள்தருதற்கேற்ப, நாத்தி என்னும் சொல் இல்லை என்ற பொருள்தரும் சொல்லாகும்.  நாத்தி பேசுவோர் நாத்திகர் எனப்படுவர்.  இவர்கள், “இறைவன் என்பவன் ஒருவன் இலன்.  ஆன்மா என்ற பொருள் ஒன்று இல்லை.  அவ்வான்மா நுகரும் பாவ புண்ணியம், இன்ப துன்பம் இல்லை.   இவற்றிற்கு  ஏதுவான மறு பிறப்பு இல்லை” என்று கூறுபவர்கள்.  இத்தகையவர்கள் இக் கருத்துக்களைப் பலமுறை சொல்லிவருதலின் மணி மொழியார்,

        ஆத்த மானார் அயலவர் கூடி
        நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்

என்றனர்.

    இவ்வாறு நாத்திகம் பேசி இல்லை என்பவர்களும் உண்டு என்று ஒவ்வும் வகையிலும் கவிகளைப் பாடியவர் சேக்கிழார்.