பக்கம் எண் :

734

             சிறுதேர்ப் பருவம்

அருந்தினர் அருந்திச் செல்ல அருந்துகின் றாரும் ஆங்கே
இருந்தினி தருந்தா நிற்க இன்னமு தட்டுப் பின்னும்
விருந்தினர் வரவு நோக்கி வித்தெலாம் வயலில் வீசி
வருந்திவிண் ணோக்கும் ஓர்ஏழ் உழவர் போல்வாடி நிற்பர்

வானமும் திசையும் பொங்கும் புகழ்மையும் வானம் பேணும்
ஞானமும் பொறையும் குன்றா நன்றியும் ஊக்கப் பாடும்
தானமும் கொடையும் அன்பும் வரிசையால் தகைசால் நண்பும்
மானமும் தவஞ்செய்தீன்ற மகவுபோல் வளர்க்க வல்லார்

என்று வேளாளரது மேம்பாட்டைப் புகழ்ந்து கூறியுள்ளதைக் காண்க.

    இதனால்தான் இறைவி இறைவன்பால் பெற்ற இருநாழி நெல்லை, வேளாளர்கட்குக் கொடுத்தனள் என்க.  இதனைச் சேக்கிழார் புராணமும்,

இமையமலை அரையன்மகள் தழுவக் கச்சி
    ஏகம்பர் திருமேனி குழைத்த ஞான்று
சமையம்அவை ஆறினுக்கும் தலைவிக் கீசர்
    தந்தபடி எட்டுழக்கு ஈராழி நெல்லும்
உமைதிருக் கடகக்கையால் கொடுக்க வாங்கி
    உழவுதொழி லால்பெருக்கி உலக மெல்லாம்
தமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும் வேளாண்
    தலைவர்பெரும் புகழ்உலகில் தழைத்த தன்றே

என்று கூறுமாற்றை உணர்க.

    கொழு என்பது ஏர்க்காறு.  இதன் சிறப்பு எத்தகையது என்பதை ஏர் எழுபது,

        வேதநூல் முதலாகி விளங்கு
            கின்ற கலைஅனைத்து
        ஓதுவார் எல்லாரும்
            உழுவார்தம் தலைக்கடைக்கே