பக்கம் எண் :

11

 கடவுள் துணை

நீதி நூல்

  காப்பு
 
  படைத்துக் காக்கும் பண்பினன் பரமன்
 
 
ஆதிநூ லொன்றும் அரும்பயன்யா ருந்தெளிவான்
நீதிநூ லொன்று நிகழ்த்தவே - மாதிரமோ
இத்தரைய னைத்தையுமி யற்றினி தில்திதிசெய்
கத்தன்மலர் ஒத்தகழல் காப்பு.
  வினையின் நீங்கிவிளங்கிய அறிவின் மெய்க் கடவுளை யுணர்த்தும் தொன்னூல்களைத் தெளிதற்குக் கருவியாக யான் இந் நீதி நூலை இயற்றுகின்றேன். இதற்கு, உலகெலாம் படைத்துக் காக்கும் தெய்வத் திருவடி காப்பு.
  மாதிரம்-திசை. திதி-காவல்.
 
  வேறு
 
  ஆதிக் கடவுள் அடியிணை போற்றி
 
மாதி ரந்தனில் வாழ்பவர் யாவரும்
தீதி கந்தறச் செய்கை முயலுவான்
நீதி நூலை நிகழ்த்த நிகரிலா
ஆதி தேவ னடியிணை யேத்துவாம்.
  நிலவுலகத்துள்ளார் அனைவர்களும் தீமையினின்று விலகி நன்மையே செய்தற்பொருட்டு நீதி நூலை இயற்ற ஆதிக்கடவுள் அடியிணை போற்றுவாம்.
  மாதிரம்-நிலம்.