| நீதிநூல் |
| அவையடக்கம் |
| வெயிலுக்கு இடும்விளக்குப் போலும்யான் நீதிநூல் கூறல் |
1 | வெயிலினைச் சோதிசெய்வான் விளக்கிடல் போலுங்காகங் குயிலினுக் கிசையுணர்த்துங் கொள்கையே போலு நட்டம் மயிலினுக் குணர்த்துங் கான வாரண மெனவும் யாவும் பயிலுல கிற்கு நீதி பகரயான் துணிவுற் றேனால்.
|
|
| இயல்பாகவே விளக்கம், இசை, ஆடல் மூன்றும் முறையே அமைந்த ஞாயிறு குயில் மயில் மூன்றினுக்கும் விளக்கு, காக்கை, காட்டுக்கோழி மூன்றும் அவற்றைத் தனித்தனி உணர்த்தப் புகுந்ததை ஒக்கும், அறமுறை அகலாதொழுகும் உலகினுக்கு யான் நீதிநூல் சொல்லுவது. |
| 1 |
| ஆன்றோர் அறிவித்த வற்றையே அவர் முன் கூறுவேன் |
2 | பானுவின் கதிரை யுண்ட பளிங்கொளி செய்தல் போலும் வானுலாங் கொண்டல் பெய்யுமழையினைத் தழையில்தாங்கித் தானும்பெய் தருவைப் போலுந் தமிழொரு மூன்றுமாராய்ந்து ஆனுவார் கவிசொல் வோர்முன் அறிவிலேன் பாடலுற்றேன். | |
| முத்தமிழாராய்ந்து செய்யுள் செய்யும் சீரியோர் முன் யான் பாடுவது சூரியகாந்தக்கல் சூரியன் முன் தீயினையும், மழை காலத்து மரங்கள் துளியினையும் தருவதை யொக்கும். |
| பானு-சூரியன். தரு-மரம். ஆனுதல்-நிறைதல். |
| 2 |
| ஊமையர் பாடலை ஒக்கும் என் பாட்டும் |
3 | முடவரே யாட அந்தர் முன்னின்று பார்த்து வக்கத் திடமொடு மூகர் பாடச் செவிடர் கேட் டதிச யிக்கக் கடலுல கினிற்கண் டென்னக் கனவினுங்கலையைத்தேரா மடமையே னுலகநீதி வகுத்திடத் துணிந்தேன்மன்னோ. | |
| முடவர் ஆட்டத்தைக் குருடர் பார்த்து மகிழவும், ஊமையர் பாட்டைச் செவிடர் கேட்டு வியக்கவும் இருப்பதை யொக்கும் ஒன்றுங்கல்லாத யான் நீதி நூல் கூறத்துணிவது. |
| அந்தர்-குருடர். மூகர்-ஊமையர். |
| 3 |