உண்மைப் பொருளடியோ ஓடுகின்ற பேர்களுக்கு விண்ணிலே போச்சுதடி - என் ஆத்தாளே வெகுபேரைப் பார்த்திருந்தேன். | 192 |
| |
இரும்பில்உறை நீர்போல் எனவிழுங்கிக் கொண்டான்டி அரும்பில் உறை வாசமும்போல் - என் ஆத்தாளே அன்றே இருந்தாண்டி. | 193 |
| |
அக்கினிகற் பூரத்தை அறவிழுங்கிக் கொண்டதுபோல் மக்கனப் பட்டுள்ளே - என் ஆத்தாளே மருவி இருந்தான்டி. | 194 |
| |
கங்குகரை இல்லான்டி கரைகாணாக் கப்பலடி எங்கும்அள வில்லான்டி - என் ஆத்தாளே ஏகமாய் நின்றான்டி. | 195 |
| |
தீவரம்போல் என்னைச் சேர்ந்தபர சின்மயங்காண் பாவகம் ஒன் றில்லான்டி - என் ஆத்தாளே பார்த்திட எல்லாம்பரங்காண். | 196 |
| |
உள்ளுக்குள் உள்ளான்டி ஊருமில்லான் பேருமில்லான் கள்ளப் புலனறுக்க - என் ஆத்தாளே காரணமாய் வந்தான்டி. | 197 |
| |
அப்பிறப்புக் கெல்லாம் அருளா அமர்ந்தான்காண் மெய்ப்பொருட்கு மெய்ப்பொருளாய் - என் ஆத்தாளே மேவி இருந்தான்டி. | 198 |
| |
நீரொளிபோல் எங்கும் நிறைந்த நிராமயங்காண் பாரொளிபோல் எங்கும் - என் ஆத்தாளே பரந்த பராபரன்காண். | 199 |
| |
நூலால் உணர்வறியேன் நுண்ணிமையை யான்அறியேன் பாலாறு சர்க்கரைதேன் - என் ஆத்தாளே பார்த்தறிந்த பூரணன்காண். | 200 |