துறந்திட்டேனே மேல்முலங் கீழ்மூ லம்பார்; துயரமாய் நடுநிலையை யூணிப் பாராய்; அறைந்திட்டேன் நடுமூலம் நடுநா டிப்பார்; அப்பவல்லோ வரைதாக்கும் தாரை காணும்; உறைந்திட்ட ஐவருந்தான் நடனங் காணும் ஒளிவெளியும் சிலம்பொலியு மொன்றாய்க் காணும் நிறைந்திட்ட பூரணமு மிதுதா னப்பா! நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே. | 6 |
| | |
சும்மா நீ பார்க்கையிலே மனத்தை யப்பா சுழுமுனையி லோட்டியங்கே காலைப் பாராய்; அம்மாநீ தேவியென்று அடங்கிப் பாராய்; அப்பவல்லோ காயசித்தி யோகசித்தி; உம்மாவும் அம்மாவும் அதிலே காணும்; ஒருமனமாய்ச் சுழுமுனையில் மனத்தை யூன்று; நம்மாலே ஆனதெல்லாஞ் சொன்னோ மப்பா! நாதர்களி லிதையாரும் பாடார் காணே! | 7 |
| | |
காணுகின்ற ஓங்கார வட்டஞ் சற்றுக் கனலெழும்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்; பூணுகின்ற இடைகலையில் பரம்போ லாடும் பொல்லாத தேகமென்றால் உருகிப் போகும் ஆணவங்களான வெல்லா மழிந்து போகும் அத்துவிதத் துரியாட்ட மாடி நிற்கும்; ஊணியதோ ரெழுத் தெல்லாந் தேவி யாகும்; ஓங்காரக் கம்பமென்ற உணர்வு தானே. | 8 |
| | |
உணர்வென்றாற் சந்திரனி லேறிப் பாவி ஓடியங்கே தலையென்ற எழுத்தில் நில்லே; அணுவென்றால் மனையாகுஞ் சிவனே யுச்சி அகாரமென்ன பதியுமென்ன சூட்ச மாகும்; கணுவென்ன விற்புருவ மகண்ட வீதி; கயிலாய மென்றதென்ன பரத்தின் வீடு; துணுவென்ற சூரியன்றன் நெருப்பைக் கண்டு தூணென்ற பிடரிலே தூங்கு தூங்கே. | 9 |