பக்கம் எண் :

442சித்தர் பாடல்கள்

பறியான வெவ்வேறு நாம மாகிப்
     பாழுலகு நம்மிடத்தே தோன்றுந் தோறும்
மறியாக வழிந்துபோம் நாமே பிரமம்
     மற்றொன்று மில்லையென்று மயக்கந் தீரே.
71
  
மயக்கமற்று நானொருவ னெனக்கு ளெல்லாம்
     மற்றொன்று மில்லையென்று தீர னாகித்
தியக்கமற்றெந் நேரமுமுள் ளிட்டுக் கொண்டு
     சேர்ந்துவருஞ் சந்தோடந் துக்கந் தள்ளி
முயக்கமற வருட்பெய்து முன்னே வந்து
     முன்னின்று விகற்பங்கள் பண்ணி னாலும்
அயக்கமற்று மனதிடமாய்ச் சதமாய்த் தள்ளி
     ஆராதி கொண்டகறித் தானாய் நில்லே.
72
  
நில்லப்பா சஞ்சாரத் தாலத் துள்ளும்
     நேராகச் சமாதியிலே யிருக்கும் போதே
அல்லப்பா தொய்தம்வந்தா லாதரவு பண்ணி
     அசையாத மலைபோல விருக்க நன்று
சொல்லப்பா கற்பமது கண்டத் தெய்துஞ்
     சுட்டிநின்று திடப்படுதல் மெத்த நன்று
வெல்லப்பா வாசனையை விண்டா யானால்
     மேவியதோ ராரூடச் சமாதி யாச்சே.
73
  
              மாயை யுத்தி

ஆச்சப்பா மாயையுத்தி சொல்ல வென்றால்
     அனேக முண்டு; சூட்சுமமாய்ச் சொல்லக் கேளு;
வாச்சப்பா தேசத்திற் பேதா பேதம்
     மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம்
ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம்
     ஓகோகோ சனங்களிலே யனேக பேதம்
வீச்சப்பா புத்திகளிற் பேதா பேதம்
     வெகுமோக மாயத்தாற் றோன்றுங் காணே.
74