வானென்ற அண்டமதிற் சென்று புக்கு வடவரையி லுச்சிநடுத் தீபங் கண்டு தேனென்ற சுத்தசிவ கங்கை தன்னில் தீர்த்தங்க ளாடித்திரு நாம மிட்டுக் கோனென்ற மனமன்பாய் மலராய்ச் சார்த்திக் கொடியமறை வேதமுந்தா னடக்கங் கண்டு தேனென்ற சித்தமே புத்தி யாகத் தெளிந்தவரே மெய்ஞ்ஞானி யாவர் பாரே. | 36 |
| | |
பாரண்ட மதையொன்றாய்ப் பார்க்கும் போது பலபேத மாயையெல்லாம் மருண்டே யோடுஞ் சீரண்டம் அகிலாண்ட பிரமாண் டங்கள் செனித்தவகை யுயிர்தோறும் நீயாய் நிற்பாய் காரண்ட லலாடக்கண் திறந்த போது கண்கொள்ளாக் காட்சியெல்லாங் கலந்தே காட்டும்; வீரண்ட மேல்வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனிற் றொடர்ந்து கூடே. | 37 |
| | |
கூடுவதென் குணமறிந்த மனமொன் றாகக் கூத்தாடித் திரியாமற் கவன மாகப் பாடுது பலநூலைப் படித்தி டாமற் பராபரத்தி னுச்சிநடு வெளியே சென்றே ஆடுவது தொந்தோமென் றாட்டைப் பார்த்தே அடுக்கடுக்கா யாயிரத்தெட்டிதழுங் கண்டு வாடுகிற பயிர்களுக்கு மழைபெய் தாற்போல் வாடாத தீபத்தை யறிந்து பாரே. | 38 |
| | |
பாரென்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர் பராபரத்து நிலையினுடைப் பாதஞ் சொன்னீர் வீரென்ற அண்டமெல்லாம் பாழ தாகி விராட பிரம மொன்றியா யிருக்கும் போது சீரென்ற வுயிர்களெல்லா மிருப்ப தெங்கே? சித்தருடன் திரிமூர்த்தி யிருப்ப தெங்கே? கூரென்று நீர்தங்கு மிடந்தா னெங்கே? குருபரனே! இந்தவகை கூறு வீரே. | 39 |