பக்கம் எண் :

468சித்தர் பாடல்கள்

கூறுகிறே னென்மகனே வாசி நாதா
     குணமான வீச்சுரனார் சபையிற் கூடித்
தேறுகின்ற பிரளயமாம் காலந் தன்னிற்
     சீவசெந்து சித்தருடன் முனிவர் தாமும்
வீருடனே யெங்கேதா னிருப்பா ரென்று
     விமலருந்தான் விஷ்ணுவையும் விவரங் கேட்கக்
கார்மேக மேனியனங் கவரை நோக்கிக்
     கண்டுமிகப் பணிந்துமினிக் கருது வானே.
40
  
கருதுவான் ஆலிலைமேற் றுயில்வேன் யானும்
     கனமான சீவசெந்தும் அனந்த சித்தர்
உறுதியா யென்றனுடைக் கமலந் தன்னில்
     ஒடுங்குவா ராதரித்து மிகவே நிற்பேன்.
வருதியாய்ப் புசுண்டருந்தான் வருவா ரென்று
     வலவனுடன் மாலானும் உரைக்கும் போது
சுருதியா யெனையழைத்தே சிவன்றான் கேட்கச்
     சூத்திரமாய் நல்வசனம் மொழிந்தேன் பாரே.
41
  
பாரென்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப்
     பல்லாயிரங் கோடியண்ட வுயிர்க ளெல்லாஞ்
சீரென்ற சித்தருடன் முனிவர் தாமுந்
     திருமாலும் ஆலிலைமேற் றுயிலும் போது
கூரென்ற வுந்தியிடக் கமலந் தன்னிற்
     கூடியே அடைந்திருப்பார் குணம தாக
வீரென்ற ஐவரையும் தாண்டி யப்பால்
     வெகுசுருக்காய் வீதிவழி வந்தேன் பாரே.
42
  
பாரப்பா ஆகாயஞ் செல்லும் போது
     பாலகனே சக்கரந்தான் சுற்றி யாட
ஆரப்பா சக்கரத்தைப் பிசகொட் டாமல்
     அதன்மேல் யேறியுந்தா னப்பாற் சென்றேன்;
நேரப்பா நெடுந்தூரம் போகும் போது
     நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்;
வீரப்பா அக்கினிபோல் படர்ந்து நிற்கும்
     வெளியொன்றுந் தெரியாம லிருக்குந் தானே.
43