பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்469


இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
     என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா!
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்;
     ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது
பெருக்கமுடன் முன்பார்த்தாற் புருட ரூபம்
     புத்திரனே பின்பார்த்தாற் பெண்போல் ரூபம்
மருக்கமுடன் யான்றானுங் கம்பத் தூடே
     வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே.
44
  
பாரப்பா இப்படியே அனந்த காலம்
     பராபரத்தி னூடேதா னிருந்து வாழ்ந்தேன்;
ஆரப்பா பிரமமுந்தான் மனமிரங்கி
     அகண்டமதைப் படைப்பதற்கே அருளும் போதும்
வீரப்பா கம்பத்தி லிருந்த பெண்ணும்
     விமலரென்றும் உமையென்றும் மிகவே தோன்றிச்
சீரப்பா சக்கரத்தி லிருந்து கொண்டு
     திருமாலைத் தானழைக்கத் தீர்க்கம் பாரே.
45
  
பாரப்பா திருமாலுங் கமலந் தன்னில்
     பல்லாயிரங் கோடி அண்ட வுயிர்க ளெல்லாம்
நேரப்பா அழைத்துமுக் குணத்தைக் காட்டி
     நிலையான சமுத்திரங்கள் பூமி தானும்
சேரப்பா ரவியோடு திங்கள் தானுஞ்
     சிறந்தெழுந்த மலைகாடு சீவ செந்து
விரப்பா நவக்கிரகம் நட்சத் ரங்கள்
     வெற்றியுடன் நால்வேதம் வகுத்த வாறே.
46
  
வாறான தெய்வமென்றும் பூத மென்றும்
     வையகத்தில் வானமென்றும் பூமி யென்றும்
கூறான மாமேரு கிரிக ளென்றும்
     கோவிலென்றுந் தீர்த்தமென்றுங் குளமுண டாக்கி
நேராகப் பிரமமே சாட்சி யாக
     நிலைத்தெங்கும் உயிர்தோறும் நிறைந்தா ரையா!
வீராகத் திரியாமல் மவுனம் பார்த்து
     வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்கக் கேளே;
47