பக்கம் எண் :

476சித்தர் பாடல்கள்

சொல்லுவா ளனந்தமறை வேத மெல்லாம்
     சுருதியடா முடிந்தெழுந்த பிரமத் தாலே
வெல்லுவார் தனையறிந்த பெரியோ ரெல்லாம்
     வீறாண்மை பேசார்கள் மவுன மாகி
அல்லுபக லற்றதொரு பிரமந் தன்னை
     ஆரறிவா ருலகத்தி லையா பாரு
சொல்லடங்கு மிடந்தனையுங் கண்டு தேறிச்
     சூத்திரமாய்க் கல்லுப்பு வாங்கு வாங்கு.
72
  
வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து
     வளமாக வப்பிலையும் பிசறு மைந்தா!
தாங்கியே திருகுகள்ளிக் குள்ளே வைத்துத்
     தமர்வாயைத் தான்மூடிச் சாபந் தீர்த்தே
ஓங்கியே திங்களுந்தான் மூன்று சென்றால்
     உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு
சாங்கமினிச் செய்யாமற் சீலை மண்ணுஞ்
     சத்தியமாய்ச் செய்தபின்னே உலர்த்திப் பாரே.
73
  
பாரப்பா வுலர்ந்த தன்பின் எடுத்து மைந்தா!
     பக்தியுடன் கசபுடத்திற் போட்டுப் பாராய்
ஆரப்பா ஆறவைத்தே யெடுக்கும் போதில்
     அருணனிறம் போலிருக்குஞ் செந்தூ ரந்தான்
நேரப்பா அணுப்போலே சரக்குக் கெல்லாம்
     நிச்சயமாய்ப் பூசியுந்தான் புடத்திற் போடு
வீரப்பா நீருமடா நவலோ கந்தான்
     வேதையென்ற வித்தையெல்லாங் கைக்குள் ளாச்சே.
74
  
ஆச்சடா வுடம்பிலுள்ள வியாதி யெல்லாம்
     அணுப்போல வுண்டிடவே பறந்து போகும்;
வாச்சடா தேகசித்தி யதிக மாச்சு
     வத்துடனே கூடியுந்தான் வாழ லாச்சு;
மூச்சுடா தலைப்பிண்டங் கொடியு மாவும்
     முத்தியடா வாங்கியபின் தயிலம் வாங்கி
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே
     இன்பமுடன் வத்துவையும் பூசை செய்யே.
75