பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 45

கவிஞன்

மோனக் கருக்கலிலே - விண்
முத்தொளி தோன்றுகையில்
வானக் கடல்கடந்தே - அதை
வாங்கிவர விரைவேன்!

முத்துப் பனித்துளியில் - கதிர்
முத்த மளிக்கையிலே
பித்துக் கவிபுனைந்தே - மணம்
பேசி மகிழ்ந்திடுவேன்!

சாயும் கதிர்களிலே - இருட்
சாலம் புரிகையிலே
காயும் நிலவெனவே - வழி
காட்ட எழுந்திடுவேன்!

நீலக் கடல்அலையில் - கதிர்
நெய்த வலையிடையே
கோலக் குளிர்மணிபோல் - கவி
கொட்டிச் சிரித்திடுவேன்!

ஊரை எழுப்பிடவே - துயர்
ஒன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவேன் - தமிழ்ச்
சாதி விழித்திடவே!

கத்தி முனைதனிலே - பயங்
காட்டும் உலகினிலே
சத்திய பேரிகையை - நான்
தட்டி முழக்கிடுவேன்!

கலாவல்லி - 1955