கவிஞன்
மோனக் கருக்கலிலே - விண்
முத்தொளி தோன்றுகையில்
வானக் கடல்கடந்தே - அதை
வாங்கிவர விரைவேன்!
முத்துப் பனித்துளியில் - கதிர்
முத்த மளிக்கையிலே
பித்துக் கவிபுனைந்தே - மணம்
பேசி மகிழ்ந்திடுவேன்!
சாயும் கதிர்களிலே - இருட்
சாலம் புரிகையிலே
காயும் நிலவெனவே - வழி
காட்ட எழுந்திடுவேன்!
நீலக் கடல்அலையில் - கதிர்
நெய்த வலையிடையே
கோலக் குளிர்மணிபோல் - கவி
கொட்டிச் சிரித்திடுவேன்!
ஊரை எழுப்பிடவே - துயர்
ஒன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவேன் - தமிழ்ச்
சாதி விழித்திடவே!
கத்தி முனைதனிலே - பயங்
காட்டும் உலகினிலே
சத்திய பேரிகையை - நான்
தட்டி முழக்கிடுவேன்!
கலாவல்லி - 1955
|