பக்கம் எண் :

102தமிழ்ஒளி கவிதைகள்2

இந்தி எதிர்ப்புப் போர்!

சிந்திய இரத்தம் உலரவில்லை - எங்கள்
       செந்தமிழ் வாழ்வு மலரவில்லை!
இந்தியை இங்கே அழைக்கின்றீர்கள்! - கூர்
       ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர்கள்!

தொளைபட்ட புண்கள் மறையவில்லை - எங்கள்
       சுதந்திர எண்ணம் நிறையவில்லை!
நுளைபட்ட இந்திக்குப் பூமாலையா? - நாங்கள்
       நோற்ற தவத்திற்குச் சாவோலையா?

கார்இருள் இன்றும் விடியவில்லை - எம்
       காற்றளை இன்றும் ஒடியவில்லை!
தேர்மிசை இந்தி உயர்குவதோ? - எங்கள்
       செந்தமிழ் அன்னை அயர்குவதோ?

எக்காளம் கொண்டிங்கே ஊதுகிறோம் - போர்
       என்றென வீரர்கள் மோதுகிறார்!
தெக்காணம் எங்கும் எதிர்ப்பொலிகேள் - இதோ
       தென்றமிழ் விடுதலை பெற்றிடும் நாள்!

நேற்றுப் பிறந்தோர் இந்திமொழி - நம்
       நேரினில் நின்றே உருட்டும்விழி
கூற்றை எதிர்த்து வளர்ந்தநமை - ஒரு
       கூகை எதிர்ப்பது தான்புதுமை!

சங்கம் அமர்ந்தது கற்பனையோ? - எங்கள்
       தன்மானம் இன்றைக்கு விற்பனையோ?
அங்கம் பதறுது தோழர்களே - போர்
       அணிகொண் டெழுவீர் வீரர்களே!

சுண்டைக்காய் நாடுகள் வாழ்கின்றன - நின்
       தோள்கள் அடிமைக்குத் தாழ்கின்றன!
கண்டதுண்டோ இவ்வர லாற்றினை? - இரு
       கண்பெற்றும் குருடெனஏன் மாற்றினை?