பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 5

தோள்தட்டி எழுவீரே!

தோள் தட்டியே எழுவீரே - பழந் 
       தொல்லை யழிந்திடவே, உழைப்போரே!
வாள் எயிற்றுக் கொடும்வேங்கை-பசி 
       வந்தஅக் காலையிற் சீறுதல்போலே!

யாருக்கிந்தப்புவி சொந்தம்?- பொருள் 
       அத்தனையு மிங்குச் சேர்த்தவர் நீரே!
ஊருக் குழைத் திளைத்தீரே உம் 
       உண்மை நிலையை யுணர்ந்திடுவீரே?

ஆழ்கடல், மடு, குன்றம் - வனம் 
       அத்தனையும் உங்கள் சக்தியறியும்!
தாழக்கிடப்பது மேனோ? உங்கள் 
       சந்ததி வாழ வழி வகுப்பீரே!

உழுது விதைத் தறுத்தீரே - பசி 
       யுற்றுத் தெருப்பிச்சை வாங்கச் சென்றீரே!
அழுது தொழுது கேட்டீரே - தயை 
       யாரிங்குக் காட்டினர் கேட்டிடுவீரே!

ஓலைக் குடிசையின் மூலை - தனில் 
       ஓய்ந்து கிடந்திடும் ஓட்டைகொள் ஏரும்
காலைப் பின்னும் கிழமாடும் உங்கள் 
       கஷ்டம் சொல்லாதோ விழித்திடுவீரே!

சோறு கொழித்திடும் நாடு - தமிழ்ச் 
       சோழரின் நாடென வையகஞ் சொல்ல
ஆறு மடுப்புனல் தேக்கிப் - பயிர் 
       ஆக்கிக் கழனிமுப் போகஞ் செய்தீரே!

காலமெலாம் உழைத்தீரே - வானம் 
       காய்ந்திட்ட போதும் வியர்வையை ஊற்றி
ஞாலம் செழித்திடச் செய்தீர் - என்ன
       ஞாயம் நீங்களின்று சாவில் விழுந்தீர்?