|
எதிரெதிரே
ஏழைகள் சிந்தும் வியர்வை,
வரியென
நீரெனப் பாய்கிறது - பணப்
பேழை யுடையவர் தம்சுக மாம், வயல்
பச்சை கொழிக்கிறது!
ஊரில் உழைத்திடும் உத்தமர் நெஞ்சில்
உதிரம் வடிகிறது - அதை
வாரிக் குடிக்கும் அரசிய லாரின்
வயிறு பெருக்கிறது!
கொத்தும் சமூகக் கழுகுக ளின்கொடுங்
கூக்குரல் கேட்கிறது - மதப்
பித்தர் அதைப் ‘பெருமாள்’ எனப் போற்றும்
பிதற்றல் கேட்கிறது!
சுற்றும் உணர்ச்சிக் குதிரை குளம்படி
சுற்றிலும் கேட்கிறது - அதிற்
பற்றும் நெருப்புப் பொறிகளி னாற்புதுப்
பாதை தெரிகிறது!
கொட்டும் முரசொலி, திக்குக ளில்இடி
கொட்டி நகைக்கிறது - பணப்
பெட்டி யருகில் இருந்த பிசாசுகள்
பேந்த விழிக்கிறது!
வானத் தகட்டில் வரைந்தவிண் மீன்களில்
வார்த்தை தெரிகிறது - புது
ஞானம் பெறும்கவி வாணர் குரலினில்
நாதம் பிறக்கிறது!
‘அலை ஓசை! - 1954
|