"கொக்கக் கோ"வென என்தாயும்
கூப்பிட நானும் ஓடிடுவேன்.
அன்புடன் என்னைப் பத்திரமாய்
அழைத்துச் செல்வாள், அவளுடனே.
குப்பை கிளறி ஆகாரம்
கொத்தித் தின்னப் பழக்கிடுவாள்.
பருந்தைக் கண்டால் இறக்கையினுள்
பதுக்கி என்னை வைத்திடுவாள்.
குருணை யோடு தானியங்கள்
கொடுக்கின் றார்கள், மனிதர்களும்.
தின்று, தின்று என்னுடலும்
தினமும் கொழுத்து வருகிறது.
என்னை இப்படி வளர்த்திடுவோர்
என்று கழுத்தைத் திருகுவரோ?
ஈசன் கருணை புரிவாரோ!
எனது உயிரைக் காப்பாரோ!
|