பக்கம் எண் :

164மலரும் உள்ளம்

என் பெயர்

பச்சைக் குழந்தை என்றனுக்குப்
    பக்குவ மாகப் பெயர்வைக்க
இச்சை கொண்டனர் பெரியோர்கள்.
    என்னைச் சுற்றிக் கூடினரே.

அம்மா உடனே அவளுடைய 
    அப்பா பெயரைக் குறிப்பிட்டு,
“சம்பந் தம்என அழைத்தாலே
    சரிப்படும்” என்று கூறினளே.

“இல்லை, இல்லை, என்அப்பா
    பெயரைத் தான்நாம் இடவேண்டும்.
செல்லப் பன்என வைப்பதுதான்
    சிறந்தது” என்றார், என் அப்பா.

“இரண்டும் வேண்டாம், பிள்ளைக்கு
    ஏற்றது சாமிப் பெயரைதான்.
பரமசிவன்தான் நல்ல” தெனப் 
    பாட்டி உரக்கக் கூறினளே.