பக்கம் எண் :

மலரும் உள்ளம்25

ரயில் வண்டி

போகுது பார், ரயில் போகுதுபார்.
புகையினைக் கக்கியே போகுதுபார்.

"குபுகுபு" சத்தம் போடுதுபார்.
"கூக்கூக்" என்றுமே கூவுதுபார்.

தூரமும், நேரமும் குறைவதுபார்.
துரிதமாய் எங்குமே ஓடுதுபார்.

அறையறை யான வண்டிகள்பார்.
அவற்றிலே மனிதர் செல்வதுபார்.

"ஸ்டேஷ"னி லெல்லாம் நிற்குதுபார்.
சிகப்புக் கொடிக்கே அஞ்சுதுபார்.

மலையைக் குடைந்தே செல்லுதுபார்.
மையிருள் தன்னிலும் ஓடுதுபார்.

பாலம் கடந்துமே போகுதுபார்.
"பட,பட கட,கட" என்குதுபார்.

பட்டண மாமா கடிதமெலாம்
பையிலே தூக்கி வருகுதுபார்.

காசைக் கரியாய் ஆக்காமல்,
கரியைப் புகையாய் விடுவதுபார் !