மலர்
இன்முகம் காட்டிடுமே - அதனால்
இன்பமும் ஊட்டிடுமே.
நன்மணம் வீசிடுமே - சுற்றி
நான்கு திசைகளுமே.
வண்டுகள் தேன்விரும்பி - நாடி
வந்திடும் மொய்த்திடவே.
கண்டவர் யாவரையும் - இதனது
காட்சி மயக்கிடுமே.
ஈசன் திருவடியில் - இதுவே
என்றென்றும் நின்றிடுமே.
பாசமாய் மக்களுமே - இதனைப்
பறித்துச் சூடுவரே.
மணம் நடக்கையிலே - அங்கே
மணத்தை வீசிடுமே.
குணம் பெரிதாகும் - ஆனால்
குற்றம் எதுவுமில்லை.
|