பக்கம் எண் :

மலரும் உள்ளம்63

பயிலுவோம்

தேனி ருக்கும் இடத்தினைத்
       தேடி மொய்க்கும் வண்டுபோல்,
சீனி யுள்ள இடத்தினைத்
       தேடி ஊரும் எறும்புபோல்,

பழம் நிறைந்த சோலையைப்
       பார்த்துச் செல்லும் கிளியைபோல்,
வளம் நிறைந்த நாட்டிலே
       வந்து சேரும் மக்கள்போல்,

பள்ள மான இடத்தினைப்
       பார்த்துப் பாயும் வெள்ளம்போல்,
நல்ல நல்ல நூல்களை
       நாடி நாமும் பயிலுவோம்.