மழை
கொட்டி டுவாய் மழையே -
நாங்கள்
குதூகல மெய்திடவே.
சொட்டுச் சொட்டாய்த் தொடங்கி - மழையே
"சோ"வெனப் பெய்திடுவாய்.
வளைவு கட்டி வைத்தே - பெரியார்
வருகை நோக்குதல்போல்
வளைந்த வான வில்லும் - உனது
வருகை காட்டிடுமே.
காரிருள் மேக மதாய் - அலைபோல்
காற்றினில் சென்றிடுவாய்.
மீறியே சென்றி டாது - மலைகள்
மோதிடப் பெய்திடுவாய்.
நெற்றியில் நீர் சொரிய - உழவர்
நிலம் உழுதபின்பும்
வற்றிய குட்டை கண்டால் - உடனே
மாமழை பெய்திடுவாய்.
|