பக்கம் எண் :

தேசிய கீதங்கள்


பாரத நாடு

பாரத தேசம்

[ராகம் -- புன்னாகவராளி]


பல்லவி

பாரத தேசமென்று பெயர்சொல்லுவார் -- மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்.


சரணங்கள்


வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் -- அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.



(பாரத)
1

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.



(பாரத)
2

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.




(பாரத)
3

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே
மொய்த்து வணிகர்பல நாட்டினர் வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற் கரையிலே



(பாரத)
4

சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவருவோம்.




(பாரத)
5

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.




(பாரத)
6

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.




(பாரத)
7

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்.




(பாரத)
8

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம்செய் வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.




(பாரத)
9

குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம
கோணிகள் செய்வோம் இரும் பாணிகள்செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.




(பாரத)
10

மந்திரம் கற்போம்வினைத் தந்திரங் கற்போம்
வானை யளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.




(பாரத)
11

காவியம் செய்வோம்நல்ல காடுவளர்ப்போம்
கலை வளர்ப்போம்கொல்ல ருலைவளர்ப்போம்
ஓவியம் செய்வோம்நல்ல ஊசிகள்செய்வோம்
உலகத் தொழிலனைத்து முவந்துசெய்வோம்.



(பாரத)
12