பக்கம் எண் :

தேசிய கீதங்கள்

சுதந்திரப் பள்ளு

சுதந்திரப் பெருமை


“தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவரி திரும்பியும்
வருவாரோ?” என்னும் வர்ண மெட்டு

வீர சுதந்திரம் வேண்டிநின் றார்பின்னர்
  வேறொன்று கொள்வாரோ? -- என்றும்
ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
  அறிவைச் செலுத்து வாரோ?
(வீர) 1

புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்
  பொய்யென்று கண்டாரேல் -- அவர்
இகழுறும் இனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
  இச்சையுற் றிருப்பாரோ?

(வீர) 2

பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
  பெற்றியை அறிந்தாரேல் -- மானம்
துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
  சுகமென்று மதிப்பாரோ?

(வீர) 3

மானுட ஜென்மம் பெறுவதற் கரிதெனும்
  வாய்மையை உணர்ந்தாரேல் -- அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
  உடன்படு மாறுளதோ?

(வீர) 4

விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
  மின்மினி கொள்வாரோ? --
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
  கைகட்டிப் பிழைப்பாரோ?
(வீர) 5

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
  மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
  கைகொட்டிச் சிரியாரோ?
(வீர) 6

வந்தே மாதரம் என்று வணங்கியபின்
  மாயத்தை வணங்குவரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
  என்பதை மறப்பாரோ?
(வீர) 7