பக்கம் எண் :

தேசிய கீதங்கள்

தேசியத் தலைவர்கள்

மஹாத்மா காந்தி பஞ்சகம்

வாழ்கநீ! எம்மான், இந்த
  வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
  விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
  பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
  மஹாத்மா நீ வாழ்க! வாழ்க!
1

அடிமைவாழ் வகன்றிந் நாட்டார்
  விடுதலை யார்ந்து செல்வம்,
குடிமையி லுயர்வு, கல்வி,
  ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும்
  படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்
  புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!
2

வேறு

கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
  மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
இடிமின்னல் காக்கும் குடைசெய்தான்
  என்கோ? என்சொலிப் புகழ்வதிங் குனையே?
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
  வெம்பிணி யகற்றிடும் வண்ணம்
படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்
  படிக்கொரு சூழ்ச்சிநீ படைத்தாய்!
3

தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
  பிறனுயிர் தன்னையும் கணித்தல்;
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
  கடவுளின் மக்களென் றுணர்தல்;
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு
  இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
  பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்!
4

பெருங்கொலை வழியாம் போர்வழி யிகழ்ந்தாய்,
  அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
  அறவழி யென்றுநீ அறிந்தாய்;
நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை
  நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
  வையகம் வாழ்கநல் லறத்தே.
5