பக்கம் எண் :

தேசிய கீதங்கள்

தேசியத் தலைவர்கள்

பூபேந்திர விஜயம்

(விருத்தம்)

பாபேந்திரியஞ் செறுத்த எங்கள்
  விவேகானந்தப் பரமன் ஞான
ரூபேந்திரன் தனக்குப் பின்வந்தோன்
  விண்ணவர்த முலகை யாள்ப்ர
தாபேந் திரன்கோப முறினுமதற்கு
  அஞ்சியறந் தவிர்கி லாதான்
பூபேந்திரப் பெயரோன் பாரதநாட் டிற்
  கடிமை பூண்டு வாழ்வோன்.
1

வீழ்த்தல்பெறத் தருமமெலாம், மறமனைத்துங்
  கிளைத்துவர மேலோர் தம்மைத்
தாழ்த்ததமர் முன்னோங்க நிலைபுரண்டு
  பாதமே ததும்பி நிற்கும்
பாழ்த்த கலியுகஞ்சென்று மற்றொருகம்
  அருகில்வரும் பான்மை தோன்றக்
காழ்த்தமன வீரமுடன் யுகாந்தரத்தின்
  நிலையினிது காட்டி நின்றான்.
2

மண்ணாளு மன்னரவன் றனைச்சிறைசெய்
  திட்டாலும் மாந்த ரெல்லாம்
கண்ணாகக் கருதியவன் புகழோதி
  வாழ்த்திமனங் களிக்கின்றாரால்
எண்ணாது நற்பொருளைத் தீதென்பார்
  சிலருலகில் இருப்ப ரன்றே?
விண்ணாரும் பரிதியொளி வெறுத்தொருபுள்
  இருளினது விரும்பல் போன்றே.
3

இன்னாத பிறர்க்கெண்ணான் பாரதநாட் டிற்
  கிரங்கி இதயம் நைவான்
ஒன்னாரென் றெவருமிலான் உலகனைத்தும்
  ஓருயிரென் றுணர்ந்த ஞானி
அன்னானைச் சிறைப்படுத்தார் மேலோர்தம்
  பெருமையெதும் அறிகி லாதார்,
முன்னாளில் துன்பின்றி இன்பம்வரா தெனப்
  பெரியோர் மொழிந்தா ரன்றே?
4