பக்கம் எண் :

பல்சுவை : தன்வரலாறும் பிற பாடல்களும்

பாப்பாப் பாட்டு

ஓடி விளையாடு பாப்பா, -- நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, -- ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
1

சின்னஞ் சிறுகுருவி போலே -- நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வன்னப் பறவைகளைக் கண்டு -- நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
2

கொத்தித் திரியுமந்தக் கோழி -- அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் -- அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.
3

பாலைப் பொழிந்துதரும், பாப்பா, -- அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் -- அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.
4

வண்டி இழுக்கும்நல்ல குதிரை, -- நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, -- இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
5

காலை எழுந்தவுடன் படிப்பு -- பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -- என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
6

பொய்சொல்லக் கூடாது பாப்பா -- என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா -- ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
7

பாதகஞ் செய்பவரைக் கண்டால் -- நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா -- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
8

துன்பம் நெருங்கிவந்த போதும் -- நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு -- துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
9

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, -- தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, -- நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.
10

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -- எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, -- நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.
11

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே, -- அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் -- அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.
12

வடக்கில் இமயமலை பாப்பா -- தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் -- இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
13

வேத முடையதிந்த நாடு, -- நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் -- இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
14

சாதிகள் இல்லையடி பாப்பா; -- குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி -- அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
15

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; -- தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; -- இது
வாழும் முறைமையடி பாப்பா.
16